இந்தியாவில் இதுவரை 200 பேரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 21) தெரிவித்துள்ளது.
அவர்களில் 77 பேர் குணமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிராவிலும் டெல்லியிலும் தலா 54 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் 20 பேருக்கும் கர்நாடகாவில் 19 பேருக்கும் ராஜஸ்தானில் 18 பேருக்கும் கேரளாவில் 15 பேருக்கும் குஜராத்தில் 14 பேருக்கும் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,326 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து 54 நாள்களாக அன்றாடத் தொற்று 15,000க்கும் கீழ் பதிவாகி வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றால் 453 பேர் உயிரிழந்துவிட்டனர்.