தடுப்பூசி போட்டோருக்கான தரைவழி பயணப் பாதையின்கீழ் (விடிஎல்) கடற்பாலம் வழியாக சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 21ஆம் தேதியிலிருந்து பாதியாகக் குறைக்கப்படும்.
அதன்படி, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே அன்றாடம் ஒவ்வொரு திசையிலும் 24 பேருந்துகள் இயக்கப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு புதன்கிழமை (டிசம்பர் 22) தெரிவித்தது.
‘விடிஎல்’ பேருந்தில் பயணம் செய்ய ஏற்கெனவே பயணச்சீட்டை வாங்கிவிட்டோர், தரைவழி பயணப் பாதையின்கீழ் தொடர்ந்து பயணம் மேற்கொள்ளலாம் என்று அமைச்சு கூறியது.
சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் அல்லாதோர், தடுப்பூசி போட்டோருக்கான பயண அனுமதியைப் பெற தொடர்ந்து விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையே பயணப் பாதை இரு நாள்களுக்கு முன்புதான் (டிசம்பர் 20) விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூரர்கள் மலேசியாவுக்கும் தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசியர்கள் சிங்கப்பூருக்கும் செல்லலாம். அவர்கள் செல்லும் நாட்டில் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை.
ஆனால், உலகின் பல நாடுகளில் ஓமிக்ரான் திரிபு வேகமாகப் பரவிவரும் வேளையில், பயணம் செய்ய அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையைத் தற்காலிகமாகக் குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
“சிங்கப்பூர், மலேசியா ஆகிய இரு நாடுகளிலும் உலகளவிலும் பொதுச் சுகாதார நிலவரத்தைக் கருத்தில்கொண்டு, தரைவழி பயணப் பாதையின்கீழ் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை மாற்றி அமைப்போம்,” என்று வர்த்தக, தொழில் அமைச்சு கூறியது.