தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) மூலம் சிங்கப்பூருக்கு வருவதற்கான புதிய விமானப் பயணச்சீட்டுகளை விற்க இன்று முதல் ஜனவரி 20 வரை பயண நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்குள் கொவிட்-19 தொற்று அதிகமாகப் பரவும் சூழலில் எல்லைக் கட்டுப்பாடுகளை சிங்கப்பூர் கடுமையாக்குகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் தரை வழி விடிஎல் பயணச்சீட்டுகளுக்கும் இத்தடை பொருந்தும்.
இதோடு, சிங்கப்பூர்-மலேசியாவுக்கு இடையில் தடுப்பூசி போட்டோருக்கான தரைப் பயணப் பாதை வழியாக கடற்பாலத்தைக் கடக்கும் பயணிகளின் எண்ணிக்கை வரும் ஜனவரி 21ஆம் தேதி முதல் பாதியாகக் குறைக்கப்படும்.
இன்று முதல் வரும் ஜனவரி 20ஆம் தேதி இரவு 11.59 வரை விடிஎல் தரைவழி பயணத்திற்கான புதிய பேருந்துப் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
இதைத் தொடர்ந்து பயணிகளின் எண்ணிக்கையும் பாதியாகக் குறைக்கப்படும் என்று வர்த்தக தொழில் அமைச்சு நேற்றுத் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிங்கப்பூரின் முடிவையொட்டி சிங்கப்பூர் செல்வதற்கான பேருந்து, விமானப் பயணச்சீட்டு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக மலேசியாவின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்தார்.
விடிஎல் தரை, விமானப் பாதை பயணச்சீட்டுகள் விற்பனை இன்று முதல் ஜனவரி 20 வரை நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.
இருந்தாலும் ஏற்கெனவே பயணச்சீட்டுகளை வாங்கி இருப்போர் தனிமை உத்தரவில்லாத விடிஎல் பயண ஏற்பாட்டின் மூலம் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு நேற்று புதிய எல்லை கட்டுப்பாடுகளைப் பற்றி அறிவித்தது. புதிய உருமாறிய ஓமிக்ரான் கிருமி தலைகாட்டியது முதல் சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினரிடையே கிருமித்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
புதிதாக நடப்புக்கு வரும் எல்லைக் கட்டுப்பாடுகள் காரணமாக, ஓமிக்ரான் பற்றி மேலும் பல தகவல்களை நன்கு தெரிந்துகொள்ள காலஅவகாசம் கிடைக்கும்.
அந்தக் கிருமிக்கு எதிரான தற்காப்பு ஆற்றலை வலுப்படுத்துவதற்கும் போதிய காலம் இருக்கும் என்றது அமைச்சு.
ஜனவரி 20க்கு பிறகு விடிஎல் பயணிகள் எண்ணிக்கை வரம்பையும் பயணச்சீட்டு விற்பனையையும் தற்காலிகமாக குறைக்க அதிகாரிகள் முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
இதனிடையே, சிங்கப்பூருக்கு வருவதற்கான விடிஎல் மொத்த விமானப் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை ஜனவரி 21 முதல் பாதி அளவு குறைக்கப்படும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்கு வரத்து ஆணையம் தெரிவித்தது.
விமானப் போக்குவரத்து துறையினரைப் பாதுகாக்க கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அமல்படுத்தப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
இவ்வேளையில், ஏற்கெனவே விடிஎல் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கி இருப்போர் அந்த ஏற்பாட்டின் நிபந்தனைகளை நிறைவேற்றும் பட்சத்தில் தனிமையில் இருக்க வேண்டிய தேவை இல்லாமல் சிங்கப்பூருக்கு வரலாம் என்று ஃபேஸ்புக் பக்கத்தில் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
விடிஎல் பயணப் பாதை வழி சிங்கப்பூருக்கு வரும் பயணிகள் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளை எதிர்நோக்குவார்கள் என்று அமைச்சு தெரிவித்தது.