உருமாறிய கொவிட்-19 ஓமிக்ரான் கிருமித்தொற்று பல நாடுகளிலும் வட்டாரங்களிலும் பரவி வரும் சூழலில் சிங்கப்பூரிலும் மேலும் பலர் அந்தக் கிருமித்தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
பயணிகளுக்கான பரிசோதனை ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து இங்கு வந்த 65 பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருந்ததாக தெரியவந்துள்ளது என்பதை அமைச்சு சுட்டிக்காட்டியது.
தீவிரமான தடமறியும் நடவடிக்கை, தொற்று தலைகாட்டினால் உடனடியாக அதைப் பரவவிடாமல் தடுக்கும் முயற்சிகள் காரணமாக இப்போதைக்கு சமூகத்தில் ஓமிக்ரான் கிருமி பரவுவதை நாம் தடுத்து இருக்கிறோம்.
இருந்தாலும் அந்தக் கிருமி எப்போது நம் சமூகத்தில் பரவும் என்பதுதான் இப்போதைய பிரச்சினை என்று சுகாதார அமைச்சு தெரிவித்து உள்ளது.
சிங்கப்பூரில் சமூகத்தில் இதுவரை ஆறு பேருக்கு ஓமிக்ரான் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.
இதனிடையே, ஓமிக்ரான் தொற்று டெல்டா கிருமித்தொற்றைவிட கடுமை குறைந்தது அல்ல என்று பிரிட்டனைச் சேர்ந்த ஒரு புதிய ஆய்வு மூலம் தெரியவந்து உள்ளது.
இந்நிலையில், தொடர்ந்து நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து சூழ்நிலை மாற்றங்களுக்கு ஏற்ப கொள்கைகளை மேம்படுத்தி வரப்போவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.