அக்டோபர் மாதத்தில் பல ஆண்டு களுக்குப் பின்னர் அதிகளவு ஏற்றம் கண்ட சிங்கப்பூரின் ஒட்டுமொத்தப் பணவீக்கமும் மூலாதாரப் பணவீக்கமும் நவம்பர் மாதத்தில் மேலும் அதிகரித்துள்ளன.
பொருளாதார வல்லுநர்கள் கணித்ததைவிட இரண்டு அளவுகோல்களும் அதிகமாக உயர்ந்துள்ளன.
வாடகை மற்றும் தனியார் சாலைப் போக்குவரத்துச் செலவுகள் தவிர்த்த மூலாதாரப் பணவீக்கம், அக்டோபரின் 1.5 விழுக்காட்டிலிருந்து கடந்த மாதம் 1.6 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
புளூம்பெர்க் ஆய்வு, மூலாதாரப் பணவீக்கம் 1.5 விழுக்காட்டில் மாறாமல் இருக்கும் எனக் கணித்திருந்தது.
கடைசியாக மூலாதாரப் பணவீக்க விகிதம் 2019 மார்ச்சில் 1.7 விழுக்காடாக உயர்ந்திருந்தது.
சிங்கப்பூரின் நாணயக் கொள்கை குறித்த மறுஆய்வுகளுக்கு நாணய ஆணையம் மிக அணுக்கமாகக் கண்காணிக்கும் அளவுகோல், பயனீட்டாளர் விலைகளின் அடிப்படைப் போக்கை படம்பிடித்துக் காட்டும் மூலாதாரப் பணவீக்கமாகும்.
வரும் மாதங்களில் மூலாதாரப் பணவீக்கம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்து வரும் இறக்குமதி, மற்றும் ஊழியர் செலவுகளும் உள்நாட்டுப் பொருளியல் நடவடிக்கைகளின் மீட்சியும் வரும் மாதங்களில் மூலாதாரப் பணவீக்கத்தின் அதிகரிப்புக்குப் பங்களிக்கும் என்று சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் தெரிவித்தன.
எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அக்டோபரில் 3.2 விழுக்காட்டாக உயர்ந்த ஒட்டு மொத்த பணவீக்கம் நவம்பரில் மேலும் உயர்ந்து 3.8 விழுக்காட்டானது.
தனியார் போக்குவரத்துச் செலவு அதிகரிப்பும் மூலாதாரப் பணவீக்கத்தின் உயர்வும் இந்த ஏற்றத்துக்கு காரணம். புளூம்பெர்க் ஆய்வாளர்களின் 3.4% எனும் கணிப்பைவிட இது அதிகம்.
தனியார் போக்குவரத்துச் செலவு 14.3 விழுக்காட்டிலிருந்து 17.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
அக்டோபரில் 7.8% ஆக இருந்த மின்சாரம், எரிவாயு செலவுகள் நவம்பரில் 10% ஆக அதிகரித்தது. மின்சாரத்திற்கான நிலையான விலைத் திட்டங்களில் இடம்பெற்றிருந்த குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்தது இதற்கு முக்கிய காரணம்.
தாராள மின்சாரச் சந்தையிலிருந்து சில்லறை விற்பனையாளர்கள் வெளியேறியதால் பாதிக்கப்பட்ட வீட்டுக் கணக்குகள் 'சிங்கப்பூர் பவர்' குழுமத்திற்கு மாற்றப்பட்டது. தாராள மின்சாரச் சந்தையில், சில்லறை விற்பனையாளர்களால் வழங்கப்படும் நிலையான விலைத் திட்டங்கள் பொதுவாக 'சிங்கப்பூர் பவர்' குழுமத்தால் விதிக்கப்படும் ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டணத்தைவிடக் குறைவாகவே இருக்கும்.
எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமானக் கட்டணங்களின் வேகமான அதிகரிப்பு, தொலைத்தொடர்பு சேவை செலவுகளில் மிதமான சரிவு காரணமாக அக்டோபரில் 1.6% ஆக இருந்த சேவைத் துறை செலவு நவம்பரில் 1.9% ஆக உயர்ந்தது.
வீட்டு வாடகைகள் மிக வேகமாக அதிகரித்ததால், அக்டோபரில் 2.5% ஆக இருந்த தங்குமிடச் செலவும் சென்ற மாதம் 2.7% ஆனது.
சமைக்கப்படாத உணவுப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக உணவுச் செலவும் நவம்பரில் 1.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது, இது முந்தைய மாதத்தில் 1.7% ஆக இருந்தது. தயாரிக்கப்பட்ட உணவுகளின் விலையில் மாற்றம் இல்லை.
அதேநேரத்தில், சில்லறை விற்பனையும் பிற பொருட்களின் விலையும் கடுமையான சரிவைக் கண்டுள்ளன. ஆடை, காலணிகளின் விலைச் சரிவினால் அக்டோபரில் 0.4% ஆக இருந்த சரிவு நவம்பரில் 0.9% ஆனது.
மூலாதாரப் பணவீக்கம் 2021ல் சராசரியாக 0.9% ஆக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டு 1% முதல் 2% வரை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சிங்கப்பூர் நாணய ஆணையமும் வர்த்தக தொழில் அமைச்சும் இந்த ஆண்டுக்கான ஒட்டுமொத்த பணவீக்கக் கணிப்பை 2 விழுக்காட்டிலிருந்து 2.3 விழுக்காட்டிற்கு உயர்த்தியுள்ளன. 2022ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 1.5% - 2.5% வரை இருக்கும் என்ற கணிப்பில் மாற்றமில்லை.

