'டெல்டா' உருமாறிய கிருமியைவிட 'ஓமிக்ரான்' மிதமான பாதிப்பையே ஏற்படுத்தக்கூடும் என்று ஆரம்ப ஆய்வுகள் தெரிவித்துள்ளது நல்லசெய்தியாக இருந்தாலும் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்படுவது இங்கிலாந்தின் தேசிய சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்புக்கு பெரும் சுமையாகக்கூடும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.
இங்கிலாந்தில் கிருமித்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக அங்கு புதன்கிழமை அன்று தொற்று 100,000ஐ கடந்தது. 106,122 புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின.
"தற்போதைக்கு கூடுதல் கட்டுப் பாடுகள் தேவையில்லை. ஆனால் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித் கேட்டுக்கொண்டுள்ளார்.
கிறிஸ்மசுக்குப் பிறகுதான் கொவிட்-19 கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.
இந்த மாதத்துக்கு முன்னர் அங்கு அன்றாட புதிய தொற்று எண்ணிக்கை சராசரியாக 70,000 ஆகத்தான் இருந்தது. ஆனால் கடந்த ஆறு நாள்களில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை 90,000க்கும் அதிகமாக இருந்து வருகிறது.
எனினும் டெல்டா வகைக் கிருமியுடன் ஒப்பிடுகையில் ஓமிக்ரான் வகைக் கிருமியின் பாதிப்பு குறைவு என ஆய்வுகள் தெரிவித்துள்ளதை நிபுணர்கள் நற்செய்தி என்றனர்.
இம்பீரியல் காலேஜ் லண்டன் மேற்கொண்ட ஆய்வு, டெல்டா வகைக் கிருமி தொற்றியவர்களைவிட ஓமிக்ரான் தொற்றியவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் சாத்தியம் 40% குறைவு என்று கூறியது. தென் ஆப்பிரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு டெல்டாவுடன் ஒப்பிடும்போது ஓமிக்ரான் கிருமி தொற்றியோருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படும் அபாயம் 70% முதல் 80% குறைவு என்று தெரிவித்துள்ளது.

