இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் ஒருவர் பலியான குண்டுவெடிப்புச் சம்பவம் மனித வெடிகுண்டுத் தாக் குதலாக இருக்கலாம் என லூதியானா காவல்துறை ஆணையர் குர்பிரீத் புல்லர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம், லூதியானாவிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தின் கழிவறையில் இந்திய நேரப்படி நேற்று பகல் 12.22 மணி அளவில் இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
"ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் வெடிமருந்தை சுமந்திருந்தவர் அல்லது அவருக்கு அருகில் இருந்தவராக இருக்கலாம். விசாரணை நடந்து வருகிறது. காயம் அடைந்த ஐவரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர்," என்று புல்லர் கூறினார்.
ஆரம்பத்தில் இரு மரணங்கள் சம்பவ இடத்திலிருந்து பதிவாகியிருந்தாலும், வெடிப்பில் ஒரு மரணத்தை காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். குண்டுவெடித் ததில் குளியலறையின் சுவர்கள் இடிந்து விழுந்ததுடன், சன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.
இதற்குப் பின்னால் தேசவிரோத சக்திகள் இருப்பதாகச் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி குற்றம் சாட்டியுள்ளார். சட்டமன்றத் தேர்தலைக் குலைக்க இத்தகைய சம்பவங்கள் நடைபெற்று வருகிறது என்றார் அவர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைப் சந்தித்து அவர் ஆறுதல் கூறினார்.
"பஞ்சாப் எல்லையோர மாநிலம். எனவே பஞ்சாப் நிலையாக இருப்பதை சில சக்திகள் விரும்புவதில்லை. விசாரணை நடைபெற்று வருகிறது. வெளி சக்திகளின் சாத்தியக்கூறு உட்பட பின்னணி எதையும் நிராகரிக்க முடியாது. மாநிலம் முழுவதும் உச்ச விழிப்புநிலையில் உள்ளது," என்றார் துணை முதல்வர் சுக்ஜிந்தர் சிங் ரந்தாவா.
சம்பவம் குறித்து உள்துறை அமைச்சு பஞ்சாப் மாநிலத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.

