கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோரைத் தனிமைப்படுத்துவதற்காக, தேவை ஏற்பட்டால் கூடுதல் நோயாளி கண்காணிப்பு வசதிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை திடீரென உயரும் சாத்தியம் இருப்பதால் அதை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை நிலவரப்படி 14 நோயாளி கண்காணிப்பு வசதிகள் இருப்பதாகத் தெரிவித்த சுகாதார அமைச்சு, தேவை ஏற்பட்டால் அடுத்த ஒரு மாதத்தில் கூடுதலாக 12 நோயாளி கண்காணிப்பு வசதிகள் அமைக்கப்படும் எனக் கூறியது.
இந்த நிலையங்களில் 11,000 பேர் வரை தனிமைப்படுத்தப்படலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் நேற்று கூறினார்.
எதிர்பாராத சூழல்கள் ஏற்பட்டால் அதற்கு ஏற்ப, தேவையான திட்டங்கள் தயார்நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மிக வேகமாக, எளிதாகப்
பரவக்கூடிய ஓமிக்ரான் கிருமித் தொற்று ஏற்படாமல் தடுக்க
பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சிங்கப்பூர் எடுத்துள்ளது.
எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவது, கொவிட்-19 தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை மேலும் பல வயதினருக்கு நீட்டிப்பது, தேவை ஏற்பட்டால் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை அதிகரிப்பது போன்ற நட
வடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
கடந்த திங்கட்கிழமை நில
வரப்படி சிங்கப்பூரில் 71 பேருக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் 65 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்கள். ஆறு பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்
பட்டுள்ளது.
ஓமிக்ரான் கிருமியால் பாதிக்கப்படுபவர்கள் தொற்றுநோய்
களுக்கான தேசிய நிலையத்தில் தனிமைப்படுத்தப்படுவர் என்று சுகாதார அமைச்சு இதற்கு முன்பு கூறியிருந்தது.
ஆனால் அவர்களில் சிலர் தற்போது சிகிச்சை பெறுவதற்காக ஒயேசியா ஹோட்டல் நொவீனாவுக்கு அனுப்பப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் அந்த ஹோட்டல் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான சமூக சிகிச்சை நிலையமாக அறிவிக்கப்பட்டது.
அந்த ஹோட்டல் தொற்றுநோய்களுக்கான தேசிய நிலையம் அருகில் அமைந்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வருவோரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த வியாழக்கிழமையன்று முன் இல்லாத அளவில் 89 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக பிரிட்டனிலிருந்து வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் பணி
புரியும் விமானச் சிப்பந்திகள் முகக்கவசங்கள், கண்களைப் பாதுகாக்கும் கண்ணாடிகள் ஆகியவற்றுடன் முழுப் பாதுகாப்பு ஆடைகளையும் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரிட்டனிலிருந்து சிங்கப்பூர் வந்த பயணிகளுக்கு ஓமிக்ரான் கிருமித்தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் இந்தப் புதிய பாதுகாப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி வரையிலான அனைத்து தடுப்பூசி போட்டுக்கொண்டாருக்கான பயணத் தட திட்டப் பயணச்சீட்டு விற்பனையை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறு சுகாதார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

