கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியை தொடக்கநிலை 1 முதல் 3 வரையில் படிக்கும் மாணவர்களுக்குப் போடுவதற்கான பதிவுக் காலம், அடுத்த மாதம் ஐந்தாம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்நடைமுறை, கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகள் மற்றும் மதரசா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குப் பொருந்தும்.
இதே வயதுப் பிரிவில் எஞ்சிய மற்ற மாணவர்களுக்கு ஜனவரி ஆறாம் தேதி முதல் தடுப்பூசிப் பதிவு காலம் தொடங்கும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் நேற்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் உருமாறிய கொவிட்-19 கிருமி வகையான ஓமிக்ரான், அதிகமாகக் கண்டறியப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
முன்னதாக இம்மாதம் 22ஆம் தேதி முதல் தொடக்கநிலை 4 முதல் 6 வரை பயிலும் மாணவர்களுக்குத் தடுப்பூசிப் பதிவுக் காலம் தொடங்கியது.
சுகாதார அமைச்சிடமிருந்து மாணவர்களின் பெற்றோருக்குத் தடுப்பூசி தொடர்பில் குறுந்தகவல் அழைப்புகள் அனுப்பப்பட்டன.
இதன்படி கிட்டத்தட்ட 110,000 குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.
அப்பிரிவில் 40 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சார்பில் அவர்களின் பெற்றோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்துவிட்டதாக நேற்று திரு சான் தகவல் அளித்தார்.
சென்ஜா-கேஷ்யூ சமூக மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தைப் பார்வையிட நேற்று சுகாதார மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரியுடன் திரு சான் சென்றிருந்தபோது இதனைத் தெரிவித்தார்.
இன்று முதல் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடத் தொடங்கும் ஏழு மையங்களில் அதுவும் ஒன்று.
பூன் லே வட்டாரத்தில் உள்ள நன்யாங் சமூக மன்றம், அவர் தெம்பனிஸ் ஹப், பாசிர் ரிஸ் எலையஸ் சமூக மன்றம், உட்லண்ட்ஸ் கேலக்சி சமூக மன்றம், நீ சூன் ஈஸ்ட் சமூக மன்றம், ஹவ்காங் சமூக மன்றம் ஆகியவற்றிலும் இன்று முதல் பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்குகின்றன என்று கூறப்பட்டது.
பிள்ளைகளுக்கென மொத்தம் 15 தடுப்பூசி நிலையங்கள் சிங்கப்பூரில் அமைக்கப்படும் நிலையில், எஞ்சிய எட்டு நிலையங்கள் ஜனவரி மாதம் முதல் இரண்டு கட்டங்களாக இயங்கத் தொடங்கும் என்று அறியப்படுகிறது.
சிங்கப்பூரில் 5 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 300,000 பிள்ளைகளே, இதுவரை தடுப்பூசி போட்டிராத ஆகப் பெரிய குழுவாக உள்ளனர். இப்பிரிவினருக்குத் தடுப்பூசி போடுவது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று கல்வி அமைச்சு அறிவித்தது.
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள், நீண்டகால வருகை அட்டை வைத்திருக்கும் பிள்ளைகள் இத்தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தகுதிபெறுவர்.
தற்போது சிங்கப்பூர் சிறாருக்கு 'ஃபைசர்-பயோஎன்டெக்/கமிர்னட்டி' கொவிட்-19 தடுப்பூசியை மட்டுமே போடுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி தொடர்பில் வருகைப்பதிவு செய்வதற்கான வரிசை, தடுப்பூசி போடுவதற்கான இடம், காத்திருக்கும் இடம், கண்காணிக்கும் இடம் எனத் தடுப்பூசி நிலையத்தில் சிறாருக்கெனத் தனி இடங்கள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்பட்டது.

