ஓமிக்ரான் வகை கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுவோர், வீட்டில் குணமடைவதும் தங்களைச் சுயமாக பரிசோதனை செய்துகொள்வதும் காலப்போக்கில் பொதுச் சுகாதார நடைமுறையின் ஓர் அங்கமாக இடம்பெறும் என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போதைய நடைமுறைகள் தற்காலிகமானவை என்பதையும் அமைச்சு தெளிவுபடுத்தியது.
ஓமிக்ரான் திரிபைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும் சிங்கப்பூர் அதன் பதில் நடவடிக்கைகளை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளவும் தற்போதைய நடைமுறை, காலஅவகாசம் வழங்குவதாக அமைச்சு கூறியது.
"இன்னும் சொல்லப்போனால், இது (ஓமிக்ரான்) வேகமாகப் பரவக்கூடிய திரிபு என்பது கடந்த சில வாரங்களாக தெளிவாகி வருகிறது. மேலும், தொற்றுக்கு ஆளானோரிடையே கடுமையான நோய்ப் பாதிப்பை இது ஏற்படுத்தும் சாத்தியம் குறைவு என்பதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன," என்றது அமைச்சு.
"ஓமிக்ரான் குறித்து கூடுதல் தெளிவு கிடைத்தவுடன் ஓமிக்ரானுக்கும் மற்ற கொவிட்-19 திரிபுகளுக்கும் இடையிலான பொதுச் சுகாதார நடைமுறைகளைக் காலப்போக்கில் நாங்கள் ஒன்றுசேர்ப்போம்.
"தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக சுயபரிசோதனை முறையை அமல்படுத்துவது மற்றும் வீட்டில் குணமடைவது உள்ளிட்டவை இத்தகைய நடைமுறைகளில் அடங்கும். கொவிட்-19 நோயுடன் வாழ்வதற்கு இவையெல்லாம் முக்கியமான நடவடிக்கைகள்," என்று அமைச்சு விவரித்தது. 'ஓமிக்ரான் குழப்பத்துக்கு ஆளான சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள்' என்ற தலைப்பில் 'புளூம்பெர்க்' செய்தி நிறுவனம் இம்மாதம் 23ஆம் தேதியன்று வெளியிட்ட கட்டுரைக்கு அமைச்சு அளித்த பதிலில் இது இடம்பெற்றிருந்தது. வெவ்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்ட மூன்று வெளிநாட்டவரின் சிங்கப்பூர் பயண அனுபவங்களை அந்தக் கட்டுரை குறிப்பிட்டிருந்தது.
டிசம்பர் 25 நிலவரப்படி
புதிய கொவிட்-19 சம்பவங்கள்-248
ஓமிக்ரான் கிருமியால் புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்-98
ஓமிக்ரான் கிருமியால் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள்-448
ரிவர் வேலி ரோட்டின் 'வினில் பார்' தொடர்பில் 10 பேர் அடங்கிய ஓமிக்ரான் கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்று உருவாகியுள்ளது.

