சிங்கப்பூரில் வரும் நாள்களிலும் வாரங்களிலும் கொவிட்-19 புதிய அலை ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பிற நாடுகளில் பரவியதைப் போலவே ஓமிக்ரான் நம் சமூகத்திலும் பரவுவதைத் தவிர்க்க இயலாது என அமைச்சுகள்நிலை கொவிட்-19 பணிக்குழுவின் துணைத் தலைவர்களில் ஒருவரான திரு வோங் ஃபேஸ்புக்கில் கூறினார்.
இருந்தாலும் அடுத்த அலையைச் சமாளிக்க எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு நாம் ஆயத்தமாக இருக்கிறோம் என்றும் ஒரே மக்களாக ஒன்று சேர்ந்து அதை வீழ்த்திவிட முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டெல்டா கிருமித்தொற்றைச் சமாளித்ததைப் போலவே ஓமிக்ரானையும் சமாளிக்க ஏதுவாக அதிகாரிகள் இப்போது நடைமுறைகளைத் திருத்தி அமைத்து வருகிறார்கள்.
இதனிடையே, சிங்கப்பூரில் சனிக்கிழமை நிலவரப்படி ஓமிக்ரான் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 546 ஆக இருந்தது என்று ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களில் 443 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 103 பேர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். யாருக்கும் கடுமையான பாதிப்பு இல்லை. தீவிர சிகிச்சையும் தேவைப்படவில்லை என்று அமைச்சு கூறியது. ஓமிக்ரான் கிருமி சென்ற மாதம் முதன்முதலாக தென் ஆப்பிரிக்காவில் தலைகாட்டியது.
அந்தக் கிருமி, டெல்டா வகை கிருமியைவிட வேகமாகப் பரவும் என்றும் ஆனால் டெல்டா அளவுக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓமிக்ரான் தொற்றுக் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் ஆற்றல் இப்போதைய தடுப்பூசி, காப்பூசியிடம் (பூஸ்டர்) உள்ளதாகவும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நடமாட்டக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளுமாறு மக்களுக்கு அமைச்சர் திரு வோங் ஊக்கமூட்டினார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அலுவலகங்களுக்குச் செல்ல முடியாத நிலை விரைவில் ஏற்படும் என்பதை அவர் சுட்டினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஊழியர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15 முதல், அவர்களுக்குத் தொற்று இல்லை என்றாலும் அலுவலகத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.