உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
ஓமிக்ரான் வகைக் கிருமியாவில் ஏற்படக்கூடிய ஆபத்து தொடர்ந்து நீடிக்கிறது. அதனால் உலக சுகாதாரக் கட்டமைப்புக்கு நெருக்கடி ஏற்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகளாவிய கொவிட்-19 தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 11 விழுக்காடு கூடியது.
பல நாடுகளில் கிருமித்தொற்று வெகுவிரைவாகக் கூடியதற்கு ஓமிக்ரான் காரணம் என்றும் சில நாடுகளில் டெல்டா தொற்றுப் பரவலைவிட ஓமிக்ரான் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது என்றும் உலக அமைப்பு கூறியது.
ஓமிக்ரானுக்கு இரண்டு மூன்று நாள்களில் இரட்டிப்பாகும் ஆற்றல் உள்ளதால் அது டெல்டாவைவிட வேகமாகப் பரவக்கூடியது என்பதைச் சான்றுகள் காட்டுகின்றன.
உடலின் தடுப்பாற்றலால் ஓமிக்ரானை அதிகம் கண்டறிய முடிவதில்லை. மேலும் அது அதிகம் பரவக்கூடியது. இதனாால் தொற்றுப் பரவல் விகிதம் வெகுவாக உயர்ந்திருக்கக்கூடும் என்றது அமைப்பு.
எனினும், ஓமிக்ரான் கண்டறியப்பட்ட தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் தொற்றுச் சம்பவங்கள் 29 விழுக்காடு குறைந்துள்ளது என்பதையும் அது குறிப்பிட்டது.
டெல்டா வகையைவிட ஓமிக்ரான் தொற்றியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயம் குறைவு என்று பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, டென்மார்க் ஆகியநாடுகளிலிருந்து வரும் தகவல்கள் கோடிகாட்டுகின்றன.
உலக அளவில் கடந்த வாரம் கிட்டத்தட்ட 5 மில்லியன் புதிய கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. ஏறக்குறைய 44,000 பேர் தொற்றால் மாண்டனர். இது முந்தைய வாரத்தைக் காட்டிலும் 4% குறைவு என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
அமெரிக்கா, பிரிட்டன். பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளில் புதிய தொற்றுகள் வெகுவாக உயர்ந்தன.
பிரான்சில் ஒரே நாளில் 179,807 புதிய தொற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்தன. ஜனவரி ஆரம்பத்தில் நாளுக்கு 250,000 தொற்றுச் சம்பவங்கள் வரை நிகழலாம் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஓலிவியே வேரன் கூறினார்.
பிரிட்டனில் நேற்று முன்தினம் இதுவரை இல்லாத அளவுக்கு 129,471 தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின. ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளைக் கொண்டுவரப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் கிடுகிடுவென பரவும் தொற்று
அமெரிக்காவில் புதிய தொற்றுகளில் ஓமிக்ரான் தொற்று 58.6 விழுக்காட்டுப் பங்கு வகிப்பதாக அமெரிக்க தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் தடுப்பு நிலையம் கூறியது. மருத்துவமனையில் சேர்க்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை கூடியுள்ளது, பெரியவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது. எனினும் ஓமிக்ரான் குழந்தைகளுக்கு மிகவும் அச்சுறுத்தலானது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை நேற்று 18,300ஐ நெருங்கி புதிய உச்சத்தைத் தொட்டது. நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் மட்டும் தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 11,201 ஆனது. கிருமி தொற்றியவர்களைப் பராமரிக்கவும் கிருமிப் பரிசோதனைகளை நடத்தவும் ஆஸ்திரேலிய மருத்துவமனைகள் திணறி வருகின்றன.
இந்நிலையில், மருத்துவக் கட்டமைப்பு மீதான சுமையைக் குறைக்க, கொவிட்-19 விதிமுறைகளில் சில மாற்றங்களை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

