'சுனாமி' போன்ற ஓமிக்ரான் மற்றும் டெல்டா உருமாறிய கொவிட்-19 பாதிப்புகள், ஏற்கெனவே எல்லையை எட்டிவிட்ட சுகாதாரக் கட்டமைப்புக்கு மேலும் நெருக்குதலை ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கவலைக்குரிய திரிபுகளான டெல்டா மற்றும் ஓமிக்ரானை 'இரட்டை அச்சுறுத்தல்கள்' என்று உலக சுகாதார நிறுவனம் புதன்கிழமை (டிசம்பர் 29) வர்ணித்துள்ளது. இவ்விரு திரிபுகளும் தொற்றுப் பாதிப்புகளைப் புதிய உச்சத்துக்கு இட்டுச்செல்கின்றன.
இதனால், மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவோர், மரணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த வாரம் உலகளவில் தொற்றுப் பாதிப்புகள் 11 விழுக்காடு கூடியதாக உலக சுகாதார நிறுவனம் கூறியது. அமெரிக்காவிலும் பிரான்சிலும் நேற்று புதன்கிழமை, இதுவரை இல்லாத தொற்றுப் பாதிப்புகள் பதிவாகின.
"டெல்டா பரவும் அதே நேரத்தில், வேகமாகப் பரவக்கூடிய ஓமிக்ரானும் பரவி வருவதால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது," என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசுஸ், செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறினார்.
"இது, ஏற்கெனவே சோர்வடைந்துள்ள சுகாதார ஊழியர்களுக்குத் தொடர்ந்து அளவுக்கு அதிகமான நெருக்குதலை அளித்து, சுகாதாரக் கட்டமைப்பு கவிழ்ந்துவிடும் நிலைக்குத் தள்ளிவிடும்," என்றார் அவர்.
கிருமித்தொற்றால் புதிதாக பாதிக்கப்படுபவர்கள் மட்டுமல்லாமல், பெரிய எண்ணிக்கையில் சுகாதாரப் பணியாளர்களும் கொவிட்-19 தொற்றால் நோய்வாய்ப்படுவதால் சுகாதாரக் கட்டமைப்புக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் டெட்ரோஸ் கூறினார்.
இவ்வாண்டு கொவிட்-19க்கு எதிரான யுத்தத்தை நினைவுபடுத்திப் பார்த்த உலக சுகாதார நிறுவனம், பெருந்தொற்றின் மிகக் கடுமையான நிலை அடுத்த ஆண்டு ஒரு முடிவுக்கு வரும் என்று நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், உலக நாடுகளுக்குத் தடுப்பூசி விநியோகம் எந்த அளவுக்கு சமநிலைப்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்தே இது உள்ளதாக அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்தொகையில் 40 விழுக்காட்டினர் ஆண்டிறுதிக்குள் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டது. அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இந்த விகிதம் 70 விழுக்காடாக அமைய அது இலக்கு நிர்ணயித்துள்ளது.


