சிங்கப்பூரில் அடுத்த மூன்று மாதங்களுக்கான மின்சாரக் கட்டணம் 5.6% உயர்த்தப்படுகிறது.
இப்போது, பொருள், சேவை வரிக்குமுன் ஒரு கிலோவாட் (kWh) மின்சாரத்திற்கு 24.11 காசு வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதிவரை அக்கட்டணம் 25.44 காசாக உயரும் என்று எஸ்பி குழுமம் அறிவித்துள்ளது.
இதனையடுத்து, சராசரியாக ஒரு மாதத்திற்கு 354 கிலோவாட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நாலறை வீட்டுக் குடும்பங்களின் மின்கட்டணம் 4.70 வெள்ளி அதிகமாகும்.
அதிகரித்துவரும் எரிபொருள் விலையே மின்கட்டண உயர்விற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
உலக அளவில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாக மின்சாரக் கட்டணம் அதிகரித்து வருகிறது.
சிங்கப்பூரின் எரிசக்தியில் கிட்டத்தட்ட 95% இயற்கை எரிவாயு மூலம் பெறப்படுகிறது. அண்டை நாடுகளில் இருந்து குழாய் வழியாக அல்லது உலக நாடுகளில் இருந்து திரவ நிலையில் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது.
மின்சாரக் கட்டணம் காலாண்டிற்கு ஒருமுறை எஸ்பி குழுமத்தால் மறுஆய்வு செய்யப்பட்டு, எரிசக்திச் சந்தை ஆணையத்திடம் இருந்து ஒப்புதல் பெறப்படும்.
"மீட்சியடைந்துவரும் பொருளியல் நடவடிக்கைகள், கடுமையான வானிலை நிகழ்வுகள், எரிவாயு உற்பத்தி நிறுத்திவைப்பு போன்ற நிகழ்வுகளால் கடந்த சில மாதங்களாக உலக அளவில் எரிசக்திச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு விலையேற்றம் காணப்படுகிறது. இவையெல்லாம், உலகின் பல நாடுகளிலும் மின்கட்டணம் உயரக் காரணமாகிவிட்டன," என்று எஸ்பி குழுமம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், உயர்த்தப்பட்ட மின்கட்டணம் குறைந்தது ஆறு மாதங்களுக்கு நீடிக்கலாம் என்று எரிசக்திப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓமிக்ரான் கொவிட்-19 கிருமிப் பரவல் காரணமாகப் பல நாடுகளில் மீண்டும் முடக்கநிலை அறிவிக்கப்பட்டு வருவதால் இந்த விலையேற்றம் நீடிக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மூத்த ஆய்வாளர் டாக்டர் டேவிட் பிராட்ஸ்டாக் கூறினார்.
2023ஆம் ஆண்டுவரை கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்தில் இருக்கலாம் என்று ஓசிபிசி வங்கியின் பொருளியல் வல்லுநரான திரு ஹோவி லீ கூறியிருக்கிறார்.
இதற்கிடையே, 2022 முதல் காலாண்டில் வீடுகளுக்கான சமையல் எரிவாயுக் கட்டணமும் 6.1% உயர்த்தப்படும் என்று சிட்டி கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இப்போதைக்கு ஒரு கிலோவாட்டுக்கு 19.04 காசாக இருக்கும் சமையல் எரிவாயுக் கட்டணம், அடுத்த காலாண்டில் 1.17 காசு கூடி, 20.21 காசாக அதிகரிக்கும். பொருள், சேவை வரியையும் சேர்த்தால் அது 21.62 காசாக உயரும்.
முந்திய காலாண்டைக் காட்டிலும், எரிபொருள் விலையேற்றம் கண்டுள்ளதும் எரிபொருள் சாராச் செலவுகள் கூடியிருப்பதுமே இந்தக் கட்டண உயர்விற்குக் காரணம் என்று சிட்டி கேஸ் தெரிவித்து உள்ளது.

