வெளிநாட்டு ஊழியர் ஒருவர், ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு தினத்தன்று ஆணிகளுடன் கூடிய ஒரு மரப்பலகையால் ஆடவர் ஒருவரை உயிர்போகும்படி தாக்கிவிட்டார் என்று அந்த ஊழியர் மீது நேற்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்தியாவைச் சேர்ந்தவரான பன்னீர் வெற்றிவேல், 26, என்ற அந்த ஊழியர் மீது, ஆபத்தான ஆயுதத்தின் மூலம் வேண்டுமென்றே கடுமையான காயங்களை ஏற்படுத்தியதாக குற்றவியல் நீதிமன்ற சிறப்பு அமர்வின்போது குற்றம் சுமத்தப்பட்டது.
புத்தாண்டு அன்று அதிகாலை சுமார் 1 மணிக்கும் 1.25 மணிக்கும் இடையில், எண் 20, உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை இ1 அருகே அந்தப் பலகையால், திரு ராஜேந்திரன் சண்முகசுந்தரன், 37, என்பவரை பன்னீர் வெற்றிவேல் தாக்கி இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் அந்த இருவரும் சச்சரவில் ஈடுபட்டதாக சனிக்கிழமை காவல்துறை தெரிவித்தது.
இருவருக்கும் இடையிலான கைகலப்பு பற்றி ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை சுமார் 1.25 மணிக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதை அடுத்து சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
அங்கு திரு ராஜேந்திரன் தலையில் காயத்துடன் அசைவின்றி தரையில் கிடந்ததை அதிகாரிகள் கண்டனர்.
திரு ராஜேந்திரன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு அவர் மாண்டுவிட்டார்.
பன்னீர் கைதாகி மேல் புலன்விசாரணைக்காக விசாரணைக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேண்டுமென்றே கடுமையான காயங்களை விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டின் பேரில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் பிரம்படி அல்லது 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை, பிரம்படி மற்றும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது.

