ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலை, அவர் கடைசியாக தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு காலாவதியாகும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் புதன்கிழமை (ஜனவரி 5) தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை, பிப்ரவரி 14ஆம் தேதி நடப்புக்கு வரும்.
சிங்கப்பூரில் ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் 1,281 பேரிடம் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவர்களில் உள்ளூரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 233. கடந்த வாரம் பதிவான மொத்த உள்ளூர் பாதிப்பில் இது 18 விழுக்காடாகும் என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்தது.
ஓமிக்ரான் திரிபு (variant) டெல்டாவைவிட வேகமாகப் பரவுவது தெரியவந்துள்ளது. எனவே, கடந்த ஆண்டு அக்டோபரில் எழுந்த டெல்டா அலையைவிட, மேலும் பெரியதொரு தொற்று அலைக்கு சிங்கப்பூர் தயாராக வேண்டும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு டெல்டா தொற்று உச்சத்தில் இருந்தபோது நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 5,000 பேரிடம் தொற்று கண்டறியப்பட்டது. ஆனால், ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு இதைவிட “ஒரு சில மடங்கு அதிகமாக” இருக்கக்கூடும் என்று திரு ஓங் சொன்னார்.
“டெல்டா தொற்று உச்சத்தில் இருந்தபோது, ஆறு முதல் எட்டு நாள்களில் தொற்றுப் பாதிப்பு இரட்டிப்பானது. ஓமிக்ரான் தொற்றுப் பாதிப்பு இரண்டு, மூன்று நாள்களில் இரட்டிப்பாகக்கூடும்,” என்று அவர் கூறினார்.
மோசமான கட்டமாக, ஓமிக்ரான் அலையின் உச்சத்தில் நாள் ஒன்றுக்கு 15,000 பேர் வரை பாதிக்கப்படக்கூடும் என்று மருத்துவச் சேவை பிரிவு இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார். எனவே, பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும்போது அதைப் போட்டுக்கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வலியுறுத்தினார்.
இதில் நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியான தரவுகளின்படி, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களிடையே டெல்டா ஏற்படுத்திய பாதிப்பைவிட ஓமிக்ரானால் ஏற்படும் பாதிப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளதை திரு ஓங் சுட்டினார். அதுவும், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இது மேலும் பொருந்துவதாக அவர் சொன்னார்.
எனவேதான், கடைசியாக தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, ஒருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலை காலாவதியாகும் கொள்கை பிப்ரவரி 14ஆம் தேதி முதல் நடப்புக்கு வருகிறது என்பதை திரு ஓங் விளக்கினார்.
ஒருவர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டதில் இருந்து, அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கருதப்படுவார். இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டு, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக கருதப்படுவதற்கு, இரண்டு வாரம் காத்திருக்க வேண்டியதுபோல இதற்குத் தேவையிராது.