கொவிட்-19 கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி மருத்துவ உதவி நாடி வந்த எட்டு மாதக் கர்ப்பிணியை சீனாவின் சியான் நகரில் உள்ள காவ்சின் மருத்துவமனை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதன் விளைவாக அப்பெண்ணுக்குத் தேவையான மருத்துவ உதவி கிடைக்காமல் வயிற்றில் இருந்த குழந்தை மாண்டது. புத்தாண்டு தினத்தன்று இந்தச் சோகச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்தக் கர்ப்பிணியின் கொவிட்-19 பரிசோதனை சான்றிதழ் காலாவதியாகி நான்கு மணி நேரம் மட்டுமே ஆகியிருந்ததாகக் கூறப்படுகிறது.
அவருக்கு அவசர சிகிச்சை தேவை என்று தெளிவாகத் தெரிந்தும் மருத்துவமனை நீக்குப்போக்குடன் நடந்துகொள்ளவில்லை என்று அதிருப்திக் குரல்கள் எழுந்துள்ளன.
ரத்தக் கசிவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு வெளியே உள்ள நடைபாதையில் அந்தக் கர்ப்பிணி பரிதவித்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
இதையடுத்து, காவ்சின்
மருத்துவமனையின் இரண்டு உயர் அதிகாரிகளைச் சீன அரசாங்கம் பதவி நீக்கம் செய்துள்ளது.
மருத்துவமனையின் தலைமை மேலாளர் இடைநீக்கம் செய்யப்
பட்டுள்ளதாக சியான் மாநில அரசாங்கம் நேற்று அறிக்கை வெளியிட்டது. அந்நகரத்தின் சுகாதார ஆணையத் தலைவருக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து எச்சரிக்கைக் கடிதம் அனுப்பப்
பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமாக விபத்து நிகழ்ந்திருப்பதாக விசாரணைக் குழு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு இழப்பீடு வழங்கும்படி மருத்துவமனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

