தடுப்பூசிக் காய நிதி உதவித் திட்டத்தின் கீழ் டிசம்பர் 31ஆம் தேதி வரை, 296 பேர் அரசாங்கத்தின் நிதி உதவிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நிதி உதவிக்குத் தகுதிபெற்ற 144 பேரைவிட இது அதிகம் என்று சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், டிசம்பர் 31 நிலவரப்படி, அந்த நிதியின்கீழ் $1,262,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது அல்லது அவ்வாறு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஒப்புநோக்க, தடுப்பூசிக் காய நிதி உதவித் திட்டத்தின்கீழ் ஆகஸ்ட் மாதம் வரை $782,000 அளிக்கப்பட்டது.
சுகாதார அமைச்சு அந்த விவரங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்தது.
உதவித் திட்டத்தின் முதல் படிநிலையில், ஆக அதிகமானத் தொகையாக $225,000 இதுவரை இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தடுப்பூசிக் காய நிதி உதவித் திட்டத்தில், தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் கடுமையான பக்கவிளைவு ஏற்படுவோருக்கு நல்லெண்ண அடிப்படையில் ஒருமுறை நிதி உதவி வழங்கப்படுகிறது.
அதற்குத் தகுதிபெற, உதவிபெறும் நபர் சிங்கப்பூரர், நிரந்தரவாசி, அல்லது நீண்டகால அனுமதியில் இங்கு வசிப்பவராக இருக்கவேண்டும்.
மேலும் அவர்கள் தேசிய கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கவேண்டும்.

