மாரிஸ் ஸ்டெல்லா உயர்நிலைப் பள்ளிக்கு வெளியே கறுப்பு மெர்சிடிஸ் வாகனம் தீப்பிடித்துக்கொண்டது. நேற்று காலை சுமார் ஏழரை மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வாகனத்தில் இருந்த ஒரு மாது, அவரது மகன் இருவரும் தீ மூள்வதற்கு முன்பே வெளியேறிவிட்டனர்.
"பள்ளிக்குள் செல்ல நாங்கள் வாகனத்தில் வரிசையில் காத்துக்கொண்டிருந்தோம், அப்போது ஏதோ எரிவதை நுகர்ந்தோம், விரைவில் வாகனத்திலிருந்து வெளியேறுமாறு எனது மகன் சொன்னான்," என திருவாட்டி குவெக் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட வாகனத்தை ஓட்டிய மாது தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்தபோது தொடக்கநிலை ஒன்றில் பயிலும் தனது மகனை அவர் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார்.
திருவாட்டி குவெக் பள்ளியில் உதவி கேட்டதாகத் தெரியவந்தது. 995 என்ற அவசர உதவி எண்ணுக்கும் அழைத்திருக்கிறார். அதற்குப் பிறகு வாகனம் தீப்பிடித்துக்கொண்டது.
பள்ளியின் பாதுகாவல் அதிகாரி ஒருவர் தீயணைப்பு சாதனத்தால் தீயை அணைக்க முயன்றிருக்கிறார். சில நிமிடங்களுக்கு ஒருமுறை தீப்பிடித்துக்கொண்ட வாகனத்திலிருந்து வெடிக்கும் சத்தம் கேட்டது.
வாகனத்திலிருந்து கறுப்புப் புகை வெளியானது. புகை பள்ளிக்குள்ளேயும் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் சிறிது நேரத்தில் தீயை அணைத்தனர். நேற்று காலை ஏழரை மணியளவில் இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததாகக் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
சம்பவத்தை நேரில் கண்டதால் பாதிக்கப்பட்ட சில மாணவர்களுக்கு மாரிஸ் ஸ்டெல்லா பள்ளி ஆதரவு வழங்கும்.
தீச்சம்பவம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது