பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங்கும் வேறு பல அரசியல் தலைவர்களும் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் சிங்கப்பூரர்களுக்குத் தங்கள் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர்.
'பொங்கலோ பொங்கல்!' என்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழில் பதிவிட்ட திரு லீ, நேற்று (ஜனவரி 14) பொங்கல் திருவிழாவின் முதல் நாள் என்று குறிப்பிட்டார்.
பொங்கல், தமிழ்ச் சமூகம் கொண்டாடும் ஓர் அறுவடை விழா என்று குறிப்பிட்ட அவர், விழாவின் முக்கியத்துவம் பற்றி விளக்கினார். கொவிட்-19 தொற்றால் கொண்டாட்டங்கள் பாதிக்கப்பட்டாலும் நிலைமை மேம்பட்டுள்ளது என்று திரு லீ கூறினார்.
பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இந்திய மரபுடைமை நிலையம் இந்த வாரயிறுதியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதையும் பிரதமர் சுட்டினார்.
பொங்கலைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவும் பங்கேற்கவும் நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
"இக்காலத்தில் நம்பிக்கை, வாழ்த்து, வளம் பொங்கட்டும்!" என்று கூறி பிரதமர் தமது
வாழ்த்துகளை நிறைவு செய்தார்.
திரு லீயைப் போல மேலும் சில அரசியல் தலைவர்களும் தங்கள் பொங்கல் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
'பொங்கலோ பொங்கல்' என்று பதிவிட்டு போக்குவரத்து
அமைச்சர் எஸ். ஈஸ்வரன் வாழ்த்து கூறினார்.
பொங்கல் என்ற சொல்லைப் பற்றி அவர் விளக்கம் தந்தார்.
நேற்று மங்கலத் தைமாதமும் நான்கு நாள் நீடிக்கும் பொங்கல் திருவிழாவும் தொடங்கிவிட்டதாக திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
"விழாவில் படைக்கப்படும் அரிசி உணவின் பெயரும் பொங்கல்தான். பாலும் வெல்லமும் இதில் இடப்படுகிறது. பால் பொங்கி வழிவது, வளம் பொங்கி வழிவதைக் குறிக்கிறது," என்றார் அவர்.
பொங்கல் நல்வாழ்த்துகளைக் கடந்த புதன்கிழமையன்றே பகிர்ந்து கொண்ட துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், பொங்கலை முன்னிட்டு கூடுதல் நடவடிக்கைகள் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறினார்.
பொங்கல் பற்றி விவரித்த அவர், மாட்டுப் பொங்கலைப் பற்றி குறிப்பிட்டார். லிட்டில் இந்தியாவில் ஆடு மாடுகள் காட்சிக்கு வைக்கப்
பட்டுள்ளதைப் பொதுமக்கள் பார்க்கலாம் என்று திரு ஹெங் சொன்னார்.
இந்திய மரபுடைமை நிலைய நிகழ்ச்சிகள் பற்றி தெரிந்துகொள்ளும்படி அவர் பொதுமக்களை ஊக்குவித்தார்.