சிங்கப்பூர் நகரத்தில் சனிக்கிழமை அன்று (ஜனவரி 15) ஒவ்வோர் ஆண்டும் போல மாட்டுப் பொங்கல் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
மாட்டுப் பொங்கலான இன்று கிளைவ் ஸ்த்ரீட்டில் உள்ள விக்னேஷ் பால் பண்ணைக் காட்சியில் மாடுகளுக்கும் மற்ற கால்நடைகளுக்கும் படையல் இட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பிற்பகல் 3 மணக்கு மாட்டுப் பொங்கல் நிகழ்ச்சி தொடங்கியது.
பால் பண்ணையைச் சேர்ந்தவர்களும் அவர்களது குடும்பத்தாரும் சர்க்கரைப் பொங்கலையும் வெண்பொங்கலையும் பொங்கி படையலிட்டனர்.
பின்னர் எழிலாக அலங்கரிக்கப்பட்ட மாடுகளுக்குப் பொட்டு இட்டு மலர் தூவி சிறப்பித்தனர்.
படைக்கப்பட்ட பொங்கலை மாடுகளுக்கு அளித்து அவர்கள் இன்புற்றனர்.
பொங்கல் திருவிழாவின் இரண்டாவது நாளில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. உழவுத் தொழிலில் உதவும் கால்நடைகளுக்கு நன்றி கூறும் வண்ணம் அவற்றைக் குளிக்கவைத்து, அலங்கரித்து, அவற்றுக்குப் படையலிட்டு உணவளிப்பது தமிழர் மரபு.
தமிழக கிராமபுரங்களில் மாட்டுப் பொங்கல் அன்று கால்நடைகள் கேட்பாரன்றி சுதந்திரமாக உலவி வரும் காட்சி இன்றும் அரங்கேறுகிறது.
படங்கள், காணொளி: சக்தி மேகனா