சிங்கப்பூரில் நேற்றுக் காலை நிலவரப்படி ஐந்து முதல் 11 வயது வரையிலான 100,000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு முதலாவது தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த விவரத்தை வெளியிட்ட கல்வி அமைச்சு, கல்வி அமைச்சின் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் தொடக்கநிலை 1 முதல் ஆறு வரையிலான மாணவர்களில் ஐந்தில் இருவர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்று தெரிவித்தது.
உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து வந்து ஒன்றாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாடு நல்ல பலனளித்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
இந்த ஏற்பாட்டின் மூலம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போட ஆரம்பித்த முதல் வாரத்திலேயே திங்கள் முதல் வியாழன் வரை2,800க்கும் மேற்பட்ட குழந்தைகள் தடுப்பூசி போட்டுள்ளனர்.
இம்மாதம் 3ஆம் தேதி ஐந்து முதல் 11 வயது குழந்தைகளுக்கு உடன்பிறந்தவர்களுடன் சேர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாடு பற்றி அறிவிக்கப்பட்டது.
இதன்படி சராசரியாக ஒவ்வொரு ஐந்து குழந்தைகளுக்கும் அவர்களின் உடன்பிறந்த ஒரு குழந்தை தடுப்பூசி போட்டுக்கொண்டதை காண முடிந்தது என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்தது.
குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் அடுத்த கட்டம் வரும் திங்கள்கிழமையிலிருந்து தொடங்கும். அப்போது படிப்படியாக அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி போடப்படும்.
இது தவிர, சிறப்புத் தேவைஉடையவர்களை கவனிப்பதில் அனுபவமுள்ள சுகாதார மேம்பாட்டுக் கழகத்தின் ஊழியர்களைக் கொண்டு நடத்தப்படும் நடமாடும் தடுப்பூசி குழுக்கள் புதன்கிழமையிலிருந்து படிப்படியாக 20ல் 12 சிறப்புக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்நாள் வரை சிறப்புத் தேவையுடைய மாணவர்கள் மூவரில் இருவர் தடுப்பூசிக்கு பதிந்துகொண்டு உள்ளனர் என்று அமைச்சு கூறியது.
"தடுப்பூசி போடுவதால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, அவர்களை சுற்றியுள்ள மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போடாதவர் களையும் பாதுகாக்கிறது.
"பெற்றோர் மற்றும் காப்பாளர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ளும் தகுதி இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்கு விக்கிறோம்.
"பண்டிகை காலம் வருவதால் அதிக சமூக ஒன்றுகூடல்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் எதிர்பார்க்கப்படும் ஓமிக்ரான் அலைக்கு இயன்றவரை நாம் பாதுகாப்பாக இருப்பது அவசியம்," என்று கல்வி அமைச்சு வலியுறுத்தி உள்ளது.

