சிங்கப்பூர் மக்கள்தொகையில் பாதிப் பேர் (51 விழுக்காட்டினர்) கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
தமது ஃபேஸ்புக் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 16) அவர் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில், சிங்கப்பூர் அதன் தடுப்பூசித் திட்டத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாகக் கூறினார்.
கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள கூடுதலானோர் முன்வருவதைச் சுட்டிய அவர், “நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 42,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்கின்றனர். கடந்த டிசம்பர் மாதம் இரண்டாம் பாதியில் நாள்தோறும் 25,000 பேர் பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். அதைவிட இப்போதைய எண்ணிக்கை கணிசமாக அதிகம்,” என்றார்.
கொவிட்-19 தொற்றுக்கும் ஓமிக்ரான் திரிபு ஏற்படுத்தக்கூடிய கடும் நோய்ப் பாதிப்புக்கும் எதிராக தடுப்பூசி வழங்கும் பாதுகாப்பை பூஸ்டர் தடுப்பூசிகள் நிலைநாட்டுவதாக அவர் சொன்னார்.
இதற்கிடையே, சிங்கப்பூரில் புதிதாக 956 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை (ஜனவரி 15) இரவு சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டது.
புதிதாக ஓமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 692ஆக உள்ளது.