சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ), ஸ்கூட் விமானங்களில் கடந்த டிசம்பர் மாதம் கிட்டத்தட்ட 600,000 பேர் பயணம் செய்தனர்.
கடந்த நவம்பரில் பதிவாகியிருந்த பயணிகள் எண்ணிக்கையைவிட இது கிட்டத்தட்ட இரு மடங்காகும். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையைவிட இது ஏழு மடங்காகும்.
எஸ்ஐஏ குழுமம் திங்கட்கிழமை பிற்பகல் (ஜனவரி 17) வெளியிட்ட தகவலில் இது தெரியவந்துள்ளது.
என்றாலும், விமானப் பயண மீட்சி விகிதம் எதிர்வரும் மாதங்களில் மெதுவடையக்கூடும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஓமிக்ரான் பரவலும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையில் (விடிஎல்) பயணிகள் வரம்பு குறைக்கப்பட்டதும் அதற்குக் காரணம்.
‘விடிஎல்’ திட்டம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்ததும் ஆண்டிறுதி பயணப் பருவமும் ஒருசேர வந்ததால் டிசம்பரில் பயணிகளிடையே தேவை கணிசமாக அதிகரித்ததாக எஸ்ஐஏ குழுமம் கூறியது.
கடந்த டிசம்பர் மாதம் பேங்காக் உட்பட எட்டு நகர்கள், எஸ்ஐஏ குழுமத்தின் ‘விடிஎல்’ கட்டமைப்பில் சேர்ந்ததை அக்குழுமம் சுட்டியது.
‘விடிஎல்’ அல்லாத நாடுகளுக்கு வழங்கப்படும் விமானச் சேவைகளையும் சேர்த்து, கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, எஸ்ஐஏ குழுமம் 85 இடங்களுக்கு விமானச் சேவைகளை வழங்கியது.