கொவிட்-19 தொற்றால் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோருக்கு ஒருங்கிணைந்த காப்புறுதித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பாதுகாப்பு இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிவரைக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த காப்புறுதி பெற்று, தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் இது பொருந்தும் என்று சிங்கப்பூர் ஆயுள் காப்புறுதிச் சங்கம் நேற்று தெரிவித்தது.
உலக சுகாதார நிறுவனம் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளை, சுகாதார அறிவியல் ஆணையத்தின் சிறப்பு நடைமுறையின்கீழ் சிங்கப்பூரில் போட்டுக்கொண்டோருக்கும் இது பொருந்தும்.
இதன் தொடர்பில் ஏதேனும் ஐயம் இருந்தால் ஒருங்கிணைந்த காப்புறுதி பெற்றிருப்போர் தங்களது காப்புறுதி முகவர்களை அல்லது ஒருங்கிணைந்த காப்புறுதி நிறுவனங்களைத் தொடர்புகொள்ளலாம் என்று சங்கம் தெரிவித்தது.
முன்னதாக, இங்குள்ள ஏழு ஒருங்கிணைந்த காப்புறுதி நிறுவனங்களும் தொடக்கத்தில் வழங்கிய 12 மாத சிறப்புப் பாதுகாப்பு கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

