கொவிட்-19 பரவல் காரணமாக சென்ற ஆண்டைப் போலவே இந்தமுறையும் சிங்கப்பூரில் தைப்பூசத் திருவிழா கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்படுகிறது.
காவடி எடுக்க அனுமதியில்லாத நிலையில், தேங் ரோடு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்வு நேற்று நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கியது. மொத்தம் 7,000 பேர் பால்குடம் எடுப்பதற்குப் பதிவுசெய்து உள்ளனர்.
பால்குடம் எடுப்போருக்கும் மற்ற பக்தர்களுக்கும் எனத் தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றிரவு 10 மணிவரை பக்தர்கள் பால்குடம் எடுக்கலாம். அதிகபட்சம் ஐவர் கொண்ட குழுக்களாக பக்தர்கள் கோவிலுக்கு வரலாம்.
சிங்கப்பூரிலுள்ள மற்ற முருகன் கோவில்களிலும் தைப்பூசத்தை முன்னிட்டு பால்குடம் உள்ளிட்ட சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புக்கிட் பாஞ்சாங் ஸ்ரீ முருகன் திருக்குன்றத்தில் அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும் பின்னர் மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பால்குடம் எடுக்கலாம்.
ஈசூன் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோவிலில் விடிகாலை 4 மணியில் இருந்து நண்பகல் 12 மணிவரை பக்தர்கள் பால்குடம் எடுப்பர்.
செங்காங் அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் ஆலயத்தில் காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 மணியில் இருந்து 8.30 மணி வரையிலும் பால்குடம் எடுத்தல் நடைபெறும்.
கூடுதல் செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

