சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் காலவரையற்று மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் முந்திய காலத்துடன் ஒப்புநோக்க, தற்போது விமானப் போக்குவரத்து இன்னும் குறைந்தே இருப்பதால் அது மீண்டு வருவதற்கு ஏற்றவாறு விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நிறுவன, விளம்பரப் பிரிவு இயக்குநர் டென்னிஸ் யிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் திங்கட்கிழமை (ஜனவரி 17) கூறினார். இதுகுறித்த மேல்விவரங்களை அவர் தரவில்லை.
தொடர்ந்து மீண்டுவரும் விமானப் பயணத் துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய சாங்கி விமான நிலையம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமிப் பரவல், உலகளவில் விமானப் பயணத் துறையை முடக்கிப்போட்டதால் 2020ஆம் ஆண்டு மே மாதம்முதல் சாங்கி விமான நிலைய இரண்டாம் முனையமும் நான்காம் முனையமும் மூடப்பட்டுள்ளன.
18 மாதங்களுக்கு இரண்டாம் முனையத்தை முடிவைத்தால் அதை இயக்கும் செலவைக் குறைக்க உதவும் என்று போக்குவரத்து முன்னாள் அமைச்சர் கோ பூன் வான் கூறியிருந்தார். மேலும், இரண்டாம் முனையத்திற்கான புதுப்பிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும் அது உதவும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, நான்காம் முனையம் எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்பது நிர்ணயிக்கப்படவில்லை. இவ்விரு முனையங்களும் மூடப்பட்டு 20 மாதங்கள் ஆகிவிட்டன.
இரண்டாம் முனையத்தின் புதுப்பிப்புப் பணிகளை 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க முன்னதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் கூடுதலாக ஐந்து மில்லியன் பயணிகளை அம்முனையம் கையாள இந்தப் புதுப்பிப்புப் பணிகள் வழிவகுக்கும்.
ஆனால், சாங்கி விமான நிலையத்தின் நிலையை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டது கொவிட்-19 சூழல். சென்ற டிசம்பர் மாதம் சாங்கி விமான நிலையத்திற்கு வந்து போன பயணிகளின் எண்ணிக்கை, கொவிட்-19க்கு முந்திய சூழலுடன் ஒப்பிடுகையில், 15 விழுக்காடு மட்டுமே.
எனினும், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு சென்ற மாதம்தான் ஆக அதிகமான பயணிகள் இங்கு வந்து சென்றனர்.
இருப்பினும், ஆண்டிறுதி விடுமுறை நிறைவடைந்துள்ளது, தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகளில் (விடிஎல்) கட்டுப்பாடுகள் முடுக்கிவிடப்பட்டது போன்ற காரணங்களால் வரும் மாதங்களில் விமானப் போக்குவரத்து மீண்டுவருவது மெதுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.