கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்திய காலத்திற்கு விமானப் பயணம் இன்னும் திரும்பாத நிலையில் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாம் முனையம் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்து மீண்டு வருவதற்கு ஏற்றவாறு இந்த முனையம் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் என்று சாங்கி விமான நிலையக் குழுமத்தின் நிறுவன, விளம்பர இயக்குநர் டெனிஸ் யிம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார். மேல் விவரங்கள் ஏதும் அவர் தரவில்லை. தொடர்ந்து மீண்டுவரும் பயணத் துறையின் தேவைகளைப் பூர்த்திசெய்ய சாங்கி விமான நிலையம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த விமான நிலைய முனையம் மீண்டும் திறக்கப்படுவதற்கான சாத்தியத்தை நிபுணர்கள் எதிர் பார்க்கவில்லை.
கொவிட்-19 கிருமிப் பரவல் உலகளவில் பயணத்துறையை முடக்கிப்போட்டதால் 2020 மே 4ஆம் தேதியன்று சாங்கி விமான நிலையக் குழுமம், விமான நிலையத்தின் 2ஆம் முனையத்தையும் நான்காம் முனையத்தையும் தற்காலிகமாக மூடியது.
18 மாதங்களுக்கு இரண்டாம் முனையத்தை மூடிவைப்பது இதை இயக்கும் செலவைக் குறைக்க உதவும் என்று அப்போதைய போக்கு வரத்து அமைச்சர் கோ பூன் வான் கூறியிருந்தார். மேலும், 2ஆம் முனையத்திற்கான புதுப்பிப்புப் பணிகளை விரைவுப்படுத்த அது உதவும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான்காம் முனையம் எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்பது பற்றி இதுவரை எந்த உறுதியும் இல்லை. இவ்விரு முனையங்களும் மூடப்பட்டு 20 மாதங்கள் ஆகிவிட்டன.
திங்கட்கிழமை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர் நேரடியாகச் சென்று பார்த்தபோது முனையம் 2ன் பெரும்பாலான பகுதிகள் தடுத்து மூடப்பட்டு இருந்தன. தரை யையும் சுவர்களையும் புதுப்பிக்கும் பணிகள் இன்னும் நிறைவுபெறாத நிலையில் இருந்தன.
இரண்டாம் முனையத்தின் புதுப்பிப்புப் பணிகளை 2024ஆம் ஆண்டுக்குள் முடிக்க இதற்கு முன்னர் திட்டமிடப்பட்டது. பணிகள் முடி வுற்ற பின்னர் ஆண்டுதோறும் கூடுதலாக ஐந்து மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்லக் கூடியதாக முனையம் 2 மாறும்.
அதன் காரணமாக, சாங்கி விமான நிலையத்தின் வருடாந்திர பயணிகளின் எண்ணிக்கை 90 மில்லியனுக்கு உயரும்.
சென்ற மாதம் சாங்கி விமான நிலையத்திற்கு வந்துபோன பயணிகளின் எண்ணிக்கை கொவிட்-19க்குப் பிந்திய சூழலில் பதிவானதில் சுமார் 15 விழுக்காடு மட்டுமே. எனினும், 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பிறகு சென்ற மாதம்தான் ஆக அதிகமான பயணிகள் இங்கு வந்து சென்றனர்.
இந்நிலையில், கொவிட்-19 தாக்கம் காரணமாக சாங்கி விமான நிலையத்தின் 5ஆம் முனையம் என்னும் ஆகப்பெரிய விமான நிலைய விரிவாக்கத் திட்டம் இன்னும் மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை ஈராண்டு
களுக்குத் தள்ளிப்போடுவதாக 2020 மே மாதம் போக்குவரத்து அமைச்சு அறிவித்தது.
திட்டத்தை எவ்வாறு தொடங்கு வது என்பது குறித்துத் தீர்மானிக்கும் முன்னர் விமானப் பயண மீட்சி குறித்து அதிகாரிகள் தெளிவான முடிவெடுக்க இந்தக் காலதாமதம் உதவும் என்று அமைச்சு கூறியது.