சிங்கப்பூரில் புதிதாக 1,185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

சிங்கப்பூரில் புதிதாக 1,185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று

1 mins read
2c00bff0-3fa6-4716-83d0-8b6c1ad91eea
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் புதன்கிழமை (ஜனவரி 19) புதிதாக 1,185 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. செவ்வாய்க்கிழமை பதிவாகியிருந்த 589 ஓமிக்ரான் பாதிப்புகளைவிட இது இரு மடங்கிற்கும் அதிகமாகும்.

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அன்றாடத் தகவலில் இது தெரியவந்துள்ளது.

1,185 ஓமிக்ரான் பாதிப்புகளில் 965 பேருக்கு உள்ளூரில் தொற்று உறுதியானது. 220 பேர் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.

ஒட்டுமொத்தமாக, புதிதாக 1,615 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. உள்ளூரில் 1,205 பேருக்கும் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்களில் 410 பேருக்கும் தொற்று உறுதியானது. செவ்வாய்க்கிழமை 1,448 கொவிட்-19 பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

கொவிட்-19க்கு மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே, வாராந்திர தொற்று விகிதம் புதன்கிழமை 1.96ஆக உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அது 1.76ஆக இருந்தது.

மருத்துவமனைகளில் 281 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 13 பேர் உள்ளனர்.