கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமம் ஒன்றின் தொடர்பில் ஹாங்காங்கில் 'ஹேம்ஸ்டர்' எனப்படும் வெள்ளெலிகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதையடுத்து, நாட்டிலுள்ள செல்லப்பிராணி விரும்பிகளும் விலங்குவதைக்கு எதிரான குழுக்களும் எதிர்ப்புக் குரல் எழுப்பி, இணையத்தில் மனு ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.
நெதர்லாந்திலிருந்து வந்த சுமார் 2,000 வெள்ளெலிகளுடன் முயல்கள், சின்சில்லாக்கள் போன்றவற்றையும் கொல்ல அரசாங்கம் அறிவித்திருந்தது.
15 கிளைகள் கொண்ட செல்லப்பிராணி விற்கும் 'லிட்டில் பாஸ்' கடைக்குச் சென்ற சிலருக்குக் கிருமித்தொற்று உறுதியானதை அடுத்து கிருமிப் பரவலை தடுப்பதற்காக அதிகாரிகள் இம்முடிவை எடுத்தனர்.
இருப்பினும், அறிவிப்பை அடுத்து தொடங்கப்பட்ட இணைய மனுவில், ஏராளமானோர் தங்களின் எதிர்ப்பைப் பதிவுசெய்துவிட்டனர்.
இதற்கிடையே, டிசம்பர் 22 முதல் 'லிட்டில் பாஸ் கடையிலிருந்து வெள்ளெலி வாங்கியோர், அதனை 'கருணைக் கொலை' செய்வதற்காக கொடுத்துவிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். இது கருணைக் கொலை அல்ல, கொலை என்கின்றனர் செல்லப்பிராணி விரும்பிகள்.

