கொவிட்-19 கிருமித்தொற்றின் 'ஓமிக்ரான்' உருமாறிய கிருமி விடுத்த மிரட்டலால் பல நாடுகள் பயணத் தடைகளை மீண்டும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
அனைத்துலகப் பயணிகளுக்கான அதன் வழக்கமான விமானச் சேவைகளை, இந்தியா நிறுத்திவைத்திருந்தது.
இந்தத் தடையை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டித்திருப்பதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்தின் தலைமை இயக்குநரகம் இது குறித்த சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டது.
இந்தியாவுக்குச் செல்லும் விமானச் சேவைகளுக்கும் அங்கிருந்து புறப்படும் விமானச் சேவைகளுக்கும் இப்புதிய நடைமுறை பொருந்தும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும் அனைத்துலக சரக்கு விமானச் செயல்பாடுகளும் இயக்குநரகம் முன்னதாக அனுமதி அளித்த இதர விமானச் சேவைகளும் இதனால் பாதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கொள்ளைநோய் சூழல் கருதி 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா அதன் அனைத்துலக விமானச் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
மற்ற நாடுகளுடன் செய்யப்பட்ட தடுப்பூசி போட்டோருக்கான பயணப் பாதை ஏற்பாட்டின் கீழ், அதே ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கின.
இதன்படி, 20க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இந்தியா அத்தகைய ஏற்பாட்டைச் செய்துகொண்டுள்ளது. இக்குறிப்பிட்ட நாடுகளுடனான விமானப் பயணங்கள் பாதிக்கப்படாது என்று அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டது.
வழக்கமான அனைத்துலக விமானச் சேவைகளைக் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி முதல், இந்தியா மீண்டும் தொடங்கத் திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஓமிக்ரான் வகைக் கிருமிப் பரவலை அடுத்து, நாடுகள் பல பயணத் தடைகளை மீண்டும் நடப்புக்குக் கொண்டு வந்தன. இதனால் விமானச் சேவைகளைத் தொடங்கி வைக்கும் திட்டத்தை இந்தியா தள்ளிவைத்தது.

