சிங்கப்பூரில் ஏறக்குறைய அனைவருமே இப்போது தேசிய கொவிட்-19 தடமறியும் செயல்திட்டத்தில் இருக்கிறார்கள். 'டிரேஸ்டுகெதர்' என்ற அந்தத் திட்டம் தொடங்கி 21 மாதங்கள் ஆகின்றன.
சிங்கப்பூர் மக்களில் ஆறு வயதுக்குட்பட்ட கிட்டத்தட்ட அனைவருமே அந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்று 'அறிவார்ந்த நாடு, மின்னிலக்க அரசாங்க அலுவலக அமைப்பின்' பேச்சாளர் ஒருவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்து உள்ளது.
இருந்தாலும் துல்லியமான எண்ணிக்கையை அந்த அலுவலகம் தெரிவிக்கவில்லை. டிரேஸ்டுகெதர் செயல்திட்டத்தில் இருந்து ஏறத்தாழ 3,000 பேர் சென்ற ஆண்டில் விலக்கப்பட்டனர்.
இது, பதிவுபெற்ற பயனீட்டாளர்களில் 0.056%தான் என்று அலுவலகம் தெரிவித்தது. டிரேஸ்டுகெதர் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களில் சிங்கப்பூரைவிட்டு வெளியேறிவிட்ட நீண்டகால அனுமதிதாரர்கள், மரணமடைந்தவர்கள் போன்றோர் அடங்குவர்.
அதோடு, தகவல் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தச் செயல்திட்டத்தில் இருந்து விலகிக்கொள்வதாகக் கேட்டு விண்ணப்பித்தவர்களும் அவர்களில் அடங்குவர்.
இப்படி 1,155 பேர் கோரிக்கை விடுத்து இருந்தனர் என்று 'அறிவார்ந்த நாடு' திட்டத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் சென்ற மே மாதம் தெரிவித்து இருந்தார்.
கொவிட்-19 நோயாளிகளுடன் அணுக்கத் தொடர்பில் இருப்போரை புளூடூத் மூலம் செயல்படும் செயலி அல்லது டோக்கன் வழியாக டிரேஸ்டுகெதர் செயல்திட்டம் அடையாளம் காண்கிறது.
தடமறியும் நோக்கத்திற்காக மட்டுமே டிரேஸ்டுகெதர் தகவல்கள் பயன்படுத்தப்படும் என்று முன்னதாக அரசாங்கம் உத்தரவாதம் அளித்து இருந்தது.
என்றாலும் டிரேஸ்டுகெதர் மூலம் திரட்டப்படும் தகவல்களைக் குற்றவியல் தொடர்பான புலன்விசாரணைகளில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டதை அடுத்து ஓராண்டுக்கு முன் அது பற்றி பரபரப்பாக பேச்சு எழுந்தது.
தொடர்ந்து ஒரு சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, தடமறியும் ஏற்பாட்டின் மூலம் பெறப்படும் தகவல்கள், ஏழு வகைகடும் குற்றச்செயல்கள் தொடர்பான புலன்விசாரணைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற நிலை உருவானது.
கொலை, பயங்கரவாதம், பாலியல் கொடுமை, ஆயுதபாணிக் கொள்ளை முதலானவை அத்தகைய குற்றச்செயல்களில் அடங்கும்.
டிரேஸ்டுகெதர் செயல்திட்டத்தில் இருந்து ஒருவர் விலகிவிட்டால் அவருடைய அடையாள எண், தொடர்பு எண் உள்ளிட்ட பதிவு பெற்ற அனைத்து தகவல்களும் டிரேஸ்டுகெதர் சேமிப்பகத்தில் இருந்து மூன்று முதல் ஐந்து வேலை நாள்களில் அழிக்கப்பட்டுவிடும்.
கொவிட்-19 தொற்று கூடுகிறது. இனிமேல் அந்தக் கிருமியுடன்தான் சேர்ந்து வாழ வேண்டி இருக்கும் என்ற நிலைக்கு ஒட்டுமொத்தமாக மாற்றமும் இடம்பெற்று வருகிறது. இத்தகைய ஒரு நிலையில் டிரேஸ்டுகெதர் ஏற்பாடும் 'சேஃப்என்ட்ரி' தேசிய மின்னிலக்க நுழைவாயில் முறையும் இனி தேவைதானா என்று சிலர் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.
அதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சு, அந்த இரண்டு முறைகளுமே கொவிட்-19க்கு எதிரான சிங்கப்பூரின் போராட்டத்தில் தொடர்ந்து முக்கிய அம்சங்களாக இருக்கின்றன என்றும் இப்போதைக்கு அவை அப்படியே இருந்து வரும் என்றும் விளக்கம் அளித்தது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி நடப்புக்கு வருவதற்கு முன் அந்தக் கிருமி வேகமாகப் பரவத் தொடங்கியபோது தடமறியும் உத்தியைப் பரந்த அளவில் தீவிரமாக சிங்கப்பூர் பயன்படுத்தியது. பிறகு சிங்கப்பூர் தடுப்பூசியில் பெரும் முன்னேற்றம் கண்ட நிலையில் அந்த அணுகுமுறை மாறியது.