பிரதமர் லீ சியன் லூங் வரும் செவ்வாய்க்கிழமை இந்தோனீசியா செல்கிறார். சிங்கப்பூர்-இந்தோனீசிய தலைவர்கள் ஒன்றுகூடலில் திரு லீ கலந்துகொள்வார் என்று அவரின் செய்தித் துறை செயலாளர் தெரிவித்தார்.
பிந்தானில் இடம்பெறும் அந்தச் சந்திப்பை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ ஏற்று நடத்துவார் என்று ஊடகத்தின் கேள்விக்கு அளித்த பதிலில் திருவாட்டி சாங் லி லின் கூறினார். இரு தரப்பு ஒத்துழைப்பின் பேரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இரு தலைவர்களும் பரிசீலிப்பார்கள்.
பரஸ்பர நலன்களுக்கான முக்கிய துறைகளில் மேலும் தீவிரமாக ஈடுபடுவதற்கான வழிகள் குறித்து அவர்கள் ஆராய்வார்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார். 2020ல் நடக்க இருந்த அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 25ஆம் தேதி நடக்கும் என்று அண்மையில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.
கொவிட்-19 தொற்று காரணமாக அப்போது அந்தச் சந்திப்பு இடம்பெற வில்லை. இதற்கு முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களும் தங்களுடைய வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சியை யொட்டி 2019 அக்டோபர் 8ஆம் தேதி சந்தித்தனர்.
முக்கியமான ஒத்துழைப்பு துறைகளில் முன்னோக்கிச் செல்வதற்கான அட்டவணையை இந்த இரு நாடுகளும் ஏற்படுத்துவதற்கு உதவக்கூடிய ஒரு தளமாக அந்த வருடாந்திர ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் 2019ல் ஒப்புக்கொண்ட ஏற்பாட்டையொட்டி முக்கிய இருதரப்பு அம்சங்கள் பற்றிய விவாதிப்புகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக இம்மாதம் 3ஆம் தேதி சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.