சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தொடங்கிய தனிமை உத்தரவில்லாத 'விடிஎல்' பயணப்பாதையின் கீழ் ஏறத்தாழ 100,000 பேர் சிங்கப்பூருக்கு வந்தனர்.
அவர்களில் ஏறக்குறைய 55,000 பேர் தரை விடிஎல் பாதை வழி கடற்பாலத்தைக் கடந்து வந்துள்ளனர். சுமார் 44,000 பேர் விமான விடிஎல் மூலம் வந்தனர்.
அந்தப் பயணப்பாதைத் திட்டம் டிசம்பர் 20ஆம் தேதி விரிவுபடுத்தப்பட்டது. அதற்குப் பிறகு தரைவழியாக ஏறக்குறைய 43,000 பேர் சிங்கப்பூருக்குள் வந்திருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை கூறியது.
இந்த விரிவாக்கம் காரணமாக மலேசியாவுக்கு சிங்கப்பூர் குடிமக்கள் போக முடிந்தது. அதேபோல, மலேசியக் குடிமக்கள் சிங்கப்பூருக்கு வர கதவு திறந்து விடப்பட்டது.
இதனிடையே, சென்ற மாதம் அறிவிக்கப்பட்டதைப்போல இன்று முதல் தரை 'விடிஎல்' பாதை மூலம் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் பயணச்சீட்டு விற்பனையும் தற்காலிகமாக பாதி அளவுக்குக் குறைக்கப்படும் என்று இந்த அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
''தொடர்ந்து சூழ்நிலைகளை அணுக்கமாகக் கண்காணித்து வருவோம். சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உலகிலும் நிலவக்கூடிய பொதுச் சுகாதார சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு அதற்கேற்ப விடிஎல் வரம்பை நாங்கள் சரிபடுத்துவோம்," என்று அந்தப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இதேபோன்ற குறைப்பு அனைத்து விமான விடிஎல் பயணிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதோடு கடுமை யான பரிசோதனைக் கட்டுப்பாடுகளும் நடப்புக்கு வந்தன.