சிங்கப்பூரில் வாராந்திர கொவிட்-19 தொற்று விகிதம் வியாழக்கிழமை (ஜனவரி 20) 2.17ஆக அதிகரித்தது. அதற்கு முதல் நாள் இந்த விகிதம் 1.96ஆக இருந்தது.
நாட்டில் கொவிட்-19 நிலவரம் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டு வரும் அன்றாடத் தகவலில் இது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 19ஆம் தேதிக்குப் பிறகு சிங்கப்பூரில் வாராந்திர தொற்று விகிதம் 2க்குமேல் அதிகரித்து இருப்பது இதுவே முதல்முறை.
இந்நிலையில், நேற்று வியாழக்கிழமை புதிதாக 1,001 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முதல் நாள் இந்த எண்ணிக்கை 1,185ஆக பதிவாகி இருந்தது.
ஒட்டுமொத்தமாக நேற்று வியாழக்கிழமை புதிதாக 1,472 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது. அதற்கு முதல் நாள் இந்த எண்ணிக்கை 1,615ஆக இருந்தது.
அவர்களில் 952 பேருக்கு உள்ளூரில் தொற்று கண்டறியப்பட்டது. 49 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
மருத்துவமனைகளில் 306 பேர் கொவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் 14 பேர் உள்ளனர்.