நாளொன்றுக்கு 15,000 பேர்வரை கிருமித்தொற்றுக்கு ஆளாகலாம் எனக் கணிப்பு
அதிகம் பரவக்கூடிய ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி சமூகத்தில் பரவி வருவதால் சிங்கப்பூரில் விரைவில் கொவிட்-19 பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு உயரலாம் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களையும் சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களையும் பாதுகாக்கும் விதமாக, இம்மாதம் 24ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதிவரை மருத்துவமனை உள்நோயாளிப் பிரிவுகளிலும் பராமரிப்பு இல்லங்களிலும் வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை. 12 முதல் 17 வயதிற்கு உட்பட்டோருக்கும் கூடுதல் தடுப்பூசி போடப்படவுள்ளது.
கொரோனா பரவும் அபாயத்தைக் குறைவாக வைத்திருக்கவும் சுகாதாரப் பராமரிப்பு அமைப்பின் மீதான நெருக்கடியைக் குறைக்கவும் ஏதுவாக, ஐந்து பேருக்குமேல் ஒன்றாக உண்ண முடியாது என்பது உள்ளிட்ட இப்போதுள்ள பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் தொடரும் என்று அமைச்சர் கான் தெரிவித்து இருக்கிறார்.
இப்போது அன்றாட பாதிப்பில் கிட்டத்தட்ட 70% ஓமிக்ரானால் ஏற்படுகிறது என்று நேற்றைய செய்தியாளர் சந்திப்பின்போது கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவரான திரு கான் சொன்னார்.
ஓமிக்ரான் தொற்றியோரில் பெரும்பாலோருக்கு இலேசான பாதிப்பே ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, 'டெல்டா' திரிபால் ஏற்பட்ட உச்ச பாதிப்பை ஓமிக்ரான் உச்சம் விஞ்சிவிடலாம் என்று நிதியமைச்சரும் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
ஓமிக்ரானால் நாளொன்றுக்கு 15,000 பேர் பாதிக்கப்படக்கூடும் என்று அதிகாரிகள் சொன்னதைச் சுட்டிக்காட்டிய அவர், தொற்று பாதிப்பு அதையும் விஞ்ச வாய்ப்புள்ளதாகவும் சொன்னார்.
மற்ற நாடுகளில் 100,000 பேருக்கு ஏறத்தாழ 400 பேர் என்ற விகிதத்தில் ஓமிக்ரான் தொற்றி வருவதை அவர் சுட்டினார்.
"அந்தக் கணக்கில் பார்த்தால், சிங்கப்பூரில் ஒரு நாளைக்கு 20,000 முதல் 25,000 பேர்வரை பாதிக்கப்படலாம்," என்றார் திரு வோங்.
ஆனாலும், எத்தனை பேர் கடுமையான தொற்றுக்கு ஆளாகி, மருத்துவமனையில் அல்லது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படக்கூடும் என்பதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"அந்த வகையில், கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்காமலேயே ஓமிக்ரான் அலையை நம்மால் கடக்க இயலும் என நம்புகிறோம்," என்று அமைச்சர் வோங் கூறினார்.
ஓமிக்ரான் அலையை எதிர்கொள்ளும் வகையில், மருத்துவமனைகளில் அதிக படுக்கைகளைக் காலியாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அதற்கேதுவாக, முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டபின், கொவிட்-19 தொற்றுவோருக்கான தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் பத்தில் இருந்து ஏழு நாள்களாகக் குறைக்கப்படவுள்ளது.
ஆயினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கிருமித்தொற்றுக்கு ஆளானால் 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனும் விதி நீடிக்கிறது.

