தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை (விடிஎல்) வழியாக சிங்கப்பூர் வருவோர், இனி வீட்டைவிட்டு வெளியில் செல்லும் நாள்களில் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) செய்துகொண்டால் போதும்.
அவர்கள் சிங்கப்பூர் வந்திறங்கியதும் தங்களது கைப்பேசி எண்ணுக்கு அனுப்பப்படும் இணைப்பு வழியாக 'ஏஆர்டி' பரிசோதனை முடிவுகளை அனுப்பி வைக்கவும் தேவையில்லை.
அத்துடன், அவர்கள் இங்கு வந்திறங்கியபின் 3ஆம், 7ஆம் நாள்களில் விரைவுப் பரிசோதனை மையங்களுக்குச் சென்று, மேற்பார்வையின்கீழ் பரிசோதனை செய்து கொள்ளவும் தேவையில்லை.
நாளை மறுநாள் 24ஆம் தேதி திங்கட்கிழமையில் இருந்து இந்த மாற்றங்கள் நடப்பிற்கு வரவுள்ளன.
கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழு நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதனை அறிவித்தது.
இதனையடுத்து, கடந்த டிசம்பர் 6ஆம் தேதிமுதல் நடப்பிலிருந்துவரும் 'விடிஎல்' பயணிகளுக்கான அன்றாடப் பரிசோதனை முறை ஒரு முடிவுக்கு வருகிறது. இந்தப் பரிசோதனை முறை மூலமாக இதுநாள்வரை 700க்கும் மேற்பட்டோரிடம் ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்திற்கு பயணிகள் வந்திறங்கியதும் கட்டாயமாக 'பிசிஆர்' பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறை நீடிக்கும். ஜோகூரிலிருந்து கடற்பாலம் வழியாக சிங்கப்பூர் வந்ததும் 'ஏஆர்டி' பரிசோதனை செய்துகொள்ளும் நடைமுறையும் தொடர்ந்து நடப்பில் இருக்கும்.