சிங்கப்பூரர்களிடையே பிரபலமான இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகள் மீண்டும் சுற்றுப்பயணிகளுக்குத் திறந்துவிடப்படவுள்ளன. உல்லாசப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கு இவ்விரு தீவுகளையும் திறந்துவிட இந்தோனீசியா திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூர், இந்தோனீசியா இரண்டிலும் கிருமித்தொற்று நிலவரம் கட்டுக்குள் இருப்பதால் இந்தோனீசிய அரசாங்கம் பயணப் பாதையை திறக்கத் தயாராய் இருப்பதாக அந்நாட்டின் பொருளியல் விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் ஏர்லாங்கா ஹார்ட்டார்டோ தெரிவித்தார்.
பயணப் பாதையை அமைப்பதற்குத் தேவையான அனைத்து விதிமுறைகளையும் செயல்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"பாத்தாம், பிந்தான் ஆகியவற்றுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பயணப் பாதையைத் திறப்பதை இந்தோனீசிய அரசாங்கம் ஊக்குவிக்கிறது... இது சுற்றுப்பயணத் துறை இயங்குவதற்கு உதவும்," என்று திரு ஏர்லாங்கா கூறினார். பயணப் பாதை எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அவர் விவரம் ஏதும் அளிக்கவில்லை.
இந்த ஏற்பாட்டின்கீழ் பிந்தான், பாத்தாம் செல்ல விரும்புவோர் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கவேண்டும், பயணம் செய்வதற்கு முன் குறைந்தது 14 நாள்களுக்கு சிங்கப்பூரில் இருந்திருக்கவேண்டும். இந்தோனீசியாவின் கொவிட்-19 செயற்குழு வெளியிட்ட அறிக்கை இதனைக் குறிப்பிட்டது.
மேலும், சிங்கப்பூரிலிருந்து புறப்படுவதற்கு முன்பு மூன்று நாள்களுக்குள் பயணிகள் பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இந்தோனீசியா சென்றடைந்த பிறகு மேலும் ஒரு பிசிஆர் பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.
நோய்க்கான அறிகுறிகள் அதிகம் இல்லாத பயணிகள் தனிமைப்படுத்தப்படுவர். மோசமான அறிகுறிகள் இருப்போர் மருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.

