மலேசியாவின் எல்லைகள் மீண்டும் திறக்கப்படலாம் என அந்நாட்டு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.
அந்த நடவடிக்கை நாட்டின் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவும் என்று அவர் தெரி வித்தார். மேலும், பயணக் கட்டுப்பாடு களால் பாதிக்கப்பட்டிருக்கும் அந்நாட்டின் சுற்றுலாத் துறையை மீண்டும் தூக்கி நிறுத்த இது கைகொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டுப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மற்ற நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன. அது போன்று மலேசியாவும் பின்பற்றலாம் என்று பிரதமர் கருத்துரைத்தார்.
ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்பு கூடுதல் தடுப்பூசித் திட்டம் நிறைவேற்றபட வேண்டியுள்ளது. இதனால் சுகாதார அமைச்சு, இது குறித்து முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. மலேசியாவின் எல்லைகள், கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டிலிருந்து மூடப்பட்டுள்ளன.
சிங்கப்பூருக்கும் அந்நாட்டுக்கும் இடையிலான தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதையின்கீழ் வரும் பயணிகள் மட்டுமே தற்போது அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே, அங்குள்ள பள்ளிகளில் கொவிட் கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
முகக்கவசம் அணியாதது, பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றாதது ஆகியவை அதற்குக் காரணம்.
கிருமித்தொற்று அறிகுறிகள் இருந்தும், ஆசிரியர்கள் பலர் பள்ளி களுக்குச் செல்வதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு கூறியது.
அதிகரித்துள்ள சம்பவங்களால் ஜோகூர், கெடா, மலாக்கா ஆகிய மாநிலங்களில் பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இவ்வேளையில் ஐந்து வயதிலிருந்து 11 வயது உள்ள பிள்ளைகளுக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை மலேசியா தொடங்கவுள்ளது.
ஆனால் 60 விழுக்காட்டுக்கும் குறைவான பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட விரும்புகின்றனர். பக்கவிளைவுகள் குறித்து பல பெற்றோர் அக்கறை கொண்டுள்ளனர்.
மலேசியாவில் நேற்று மொத்தம் 4,744 தொற்றுச் சம்பவங்கள் பதி வாகின.

