சிங்கப்பூரில் இரவுநேர எஃப்1 கார் பந்தயம் இவ்வாண்டு அக்டோபர் 2ஆம் தேதி நடக்கும்
சிங்கப்பூரில் ஃபார்முலா ஒன் (எஃப்1) விரைவு கார் பந்தயம் இன்னும் ஏழாண்டுகளுக்கு நடத்தப்படும் என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் சிங்கப்பூர் ஜிபி அமைப்பும் அறிவித்துள்ளன.
எஃப்1 குழுமத்துடன் செய்யப்பட்டுள்ள ஆக நீண்டகால ஒப்பந்தம் இது. இதற்குமுன் நான்கு முதல் ஐந்தாண்டுகளுக்கே ஒப்பந்தம் செய்யப்பட்டது.
வணிக, வாழ்க்கைப்பாணி மையமாக சிங்கப்பூர் தனது இடத்தை மீண்டும் நிலைநிறுத்த உதவும், நீண்டகால நோக்கில் நாடு தனது போட்டித்தன்மைச் சாதக நிலையை உறுதிப்படுத்தும் நோக்கில் இப்படி நீண்டகாலத்திற்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக சிங்கப்பூரில் இரவுநேர எஃப்1 பந்தயம் இடம்பெறவில்லை.
கடைசியாக 2017ஆம் ஆண்டு நான்காண்டுகளுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. பந்தயத்தின் முதன்மை ஆதரவாளராக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடனான ஒப்பந்தமும் கடந்த ஆண்டுடன் முடிவிற்கு வந்தது.
இந்நிலையில், வரும் 2028ஆம் ஆண்டுவரை இங்கு எஃப்1 பந்தயம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு அக்டோபர் 2ஆம் தேதி மரினா பே சாலைப் பந்தயத் தடத்தில் அப்பந்தயம் இடம்பெறும்.
"தொற்றுப் பரவல் ஏற்படுத்தி உள்ள உடனடி சவால்களை எதிர்கொண்டு வந்தாலும், பொருளியல் மீட்சியிலும் நீண்டகால வளர்ச்சியிலும் நாம் கவனம் செலுத்துகிறோம் என்பது முக்கியமானது. சுற்றுப்பயணிகளை ஈர்ப்பதிலும் அனைத்துலக நிகழ்ச்சிகளுக்கும் வர்த்தகச் சந்திப்புகளுக்கும் சிங்கப்பூர் எஃப்1 பந்தயம் தொடர்ந்து வலுவானதொரு மையப்புள்ளியாக விளங்கும்," என்று போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான எஸ்.ஈஸ்வரன் தெரிவித்தார்.
எஃப்1 பந்தயம் நடத்தும் காலத்தை மேலும் நீட்டிப்பதால் விளையும் நீண்டகாலப் பயன்களை முழுமையாக மதிப்பிட்ட பின்னரே, இன்னும் ஏழாண்டுகளுக்கு அதனைத் தொடர்ந்து நடத்த முடிவுசெய்யப்பட்டது என்று திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார்.
கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற பந்தயமானது மூன்று நாள்களிலும் சேர்த்து மொத்தம் 268,000 பார்வையாளர்களை ஈர்த்தது.
வழக்கமாக, பார்வையாளர்களில் 40 விழுக்காட்டினர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாக இருப்பர். பந்தயக் காலத்தில் சுற்றுப்பயணிகள் மூலமாக ஆண்டிற்கு $130 மில்லியன் வருமானம் ஈட்டப்படும்.
கடந்த 2008ஆம் ஆண்டில் இருந்து 12 முறை இங்கு எஃப்1 பந்தயங்கள் நடத்தப்பட்டுள்ளன. அவை 550,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. அவர்கள் மூலமாக $1.5 பில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த இரவுநேர கார் பந்தயத்திற்கு $135 மில்லியன் செலவாகிறது. அதில் 60 விழுக்காட்டை வர்த்தக, தொழில் அமைச்சும் சிங்கப்பூர் பயணத்துறை கழகமும் ஏற்கும். எஞ்சிய தொகைக்குப் பந்தய விளம்பரதாரரான சிங்கப்பூர் ஜிபி ஏற்றுக்கொள்ளும்.
இதனிடையே, என்எஸ் சதுக்கத்தைக் கட்டத் திட்டமிட்டுள்ளதால் மரினா பே பந்தயத் தடம் சற்று மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

