அடுத்த ஆண்டில் இருந்து பயனீட்டாளர்களிடம் பேரங்காடிகள் வசூலிக்கக்கூடும்
அடுத்த ஆண்டின் முற்பகுதியில் இருந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பைகளுக்குப் பயனீட்டாளர்களிடம் ஐந்து முதல் பத்துக் காசு வரை பேரங்காடிகள் வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பைகளுக்கான கட்டணம் குறித்த வழிகாட்டி நெறிமுறைகளை தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்டது.
ஒருமுறை பயன்படுத்திவிட்டு, வீசியெறியக்கூடிய பைகளின் பயன்பாட்டைக் குறைத்து, பலமுறை பயன்படுத்தக்கூடிய பைகளுக்கு மாறுவதை ஊக்குவிப்பதே அந்த நெறிமுறைகளின் நோக்கம்.
சிங்கப்பூர் கழிவு உருவாக்கத்தைக் குறைப்பதற்கான அரசாங்கப் பரிந்துரைகளின் ஒரு பகுதியாக அந்த நெறிமுறைகள் அமைந்துள்ளன.
இங்குள்ள பெரும்பாலான பேரங்காடிகள் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிப்பதை நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இணையம் வழியாகப் பொருள் வாங்குவதற்கு இது பொருந்தாது.
புதிய வழிகாட்டி நெறிமுறைகளின்படி, அத்தகைய பைகள் எத்தனை வழங்கப்பட்டுள்ளன, அதற்காக வசூலிக்கப்பட்ட மொத்த தொகை எவ்வளவு, அதனை அவை எவ்வாறு பயன்படுத்துகின்றன போன்ற விவரங்களைப் பேரங்காடிகள் வெளியிட வேண்டும்.
ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாகவே சுற்றுச்சூழல் குழுக்கள் கோரி வருகின்றன.
சராசரியாக ஒருவருக்கு 146 பைகள் என, ஓராண்டில் 820 மில்லியன் நெகிழிப் பைகள் பேரங்காடிகளில் இருந்து பெற்றுச் செல்லப்படுகின்றன என்பது லாப நோக்கமற்ற 'சிங்கப்பூர் சுற்றுச்சூழல் மன்றம்' கடந்த 2018ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்மூலம் தெரியவந்தது.
சில கடைகள் ஏற்கெனவே நெகிழிப் பைகளுக்குக் கட்டணம் வசூலித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஃபேர்பிரைஸ் குழுமம் 2019 நவம்பர் மாதத்தில் இருந்து தனது சில குறிப்பிட்ட கடைகளில் நெகிழிப் பைகளுக்கு 20 காசு வசூலித்து வருகிறது.
இந்த வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பான தங்களது கருத்துகளை அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்' இணையத்தளம் வழியாக அடுத்த மாதம் 17ஆம் தேதிக்குள் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

