இரண்டு 11 வயது சிறுவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட கால்வாய்ப் பகுதிக்கு அவர்களின் தந்தையான 48 வயது சேவியர் யாப் ஜுங் ஹோனை நேற்று காவல்துறை அழைத்துச் சென்றது.
தமது இரட்டைப் பிள்ளைகளில் ஒருவரான ஈத்தன் யாப் இ செர்னைக் கொன்றதாகக் கூறி, கடந்த திங்கட்கிழமையன்று யாப்மீது குற்றம் சுமத்தப்பட்டது. மாண்டு கிடந்த இன்னொரு மகன் ஆஸ்டன் யாப் காய் ஷெர்ன் என அடையாளம் காணப்பட்டது.
நேற்றுப் பிற்பகல் 3.10 மணியளவில் யாப் சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். கிட்டத்தட்ட 35 நிமிடங்கள் அவரும் காவல்துறை அதிகாரிகளும் அங்கு இருந்தனர். பின்னர் தாம் வந்த கறுப்புநிற வேனிலேயே அவர் ஏற்றிச் செல்லப்பட்டார்.
அவர் சென்ற பின்னரும் விசாரணை அதிகாரிகள் அங்கிருந்தனர். பின்னர் மாலை 5 மணி அளவில் விசாரணை அதிகாரிகள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.
கிரீன்ரிட்ஜ் கிரசென்ட் பகுதியில் உள்ள ஒரு விளையாட்டுத் திடலுக்கு அருகே இருக்கும் அந்தக் கால்வாயில் கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் அந்த இரட்டையர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அவர்களின் தந்தையான யாப் உதவிகோரி காவல்துறையை அழைத்தார். மறுநாள் அவர் கைதுசெய்யப்பட்டார்.
மாண்ட இருவரும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் என்று நம்பப்படுகிறது.
இவ்வழக்கு இம்மாதம் 31ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கொலைக் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், யாப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்படும்.