கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் மாண்டுகிடந்த இந்தியாவைச் சேர்ந்த நால்வர், 39 வயது ஜக்தீஷ் பட்டேல், 37 வயது வைஷைல்பென் பட்டேல், இவ்விருவரின் பிள்ளைகளான 11 வயது விஹாங்கி, மூன்று வயது தார்க்மிக் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். கனடாவின் மனிட்டோபா மாநிலத்திற்கு அருகே மோசமான குளிரைத் தாங்கமுடியாமல் இவர்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் கால்நடையாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது வெப்பநிலை பூஜ்யத்திற்கு 35 டிகிரி செல்சியசுக்குக் குறைவாக இருந்தது. அப்போது இரவு வேளை.
இம்மாதம் 19ஆம் தேதியன்று எல்லைப் பகுதிக்கு அருகே இருந்த திடலில் இவர்களின் உடல்கள் காணப்பட்டன. கனடாவுக்கான இந்தியத் தூதரகம் மாண்டோரின் அடையாளத்தை அறிவித்தது. அதை கனடாவின் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
ஆள்கடத்தல் நடவடிக்கையோடு இவர்களின் மரணம் தொடர்புடையதாக இருக்கலாம் என்று கனடிய அதிகாரிகள் நம்புகின்றனர். இம்மாதம் 12ஆம் தேதியன்று இவர்கள் கனடாவின் டொரொன்டோ நகருக்கு விமானத்தில் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து மனிட்டோபாவிற்குச் சென்றிருக்கின்றனர். அதற்குப் பிறகு 18ஆம் தேதிவாக்கில் எல்லைப் பகுதியில் உள்ள எமர்சன் நகருக்குச் சென்றதாக கனடியி காவல்துறை அதிகாரிகள் தெரிவத்தனர். அதற்கு மறுநாள் இரவு இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
எமர்சன் நகரில் கனடிய-அமெரிக்க எல்லைப் பகுதியில் எந்த வாகனமும் காணப்படவில்லை. ஒருவர் வாகனத்தில் இறக்கிவிட்ட பிறகு பட்டேல் குடும்பத்தார் கால்நடையாகப் பயணம் மேற்கொண்டிருப்பர் எனக் கருதப்படுகிறது.
இம்மாதம் 19ஆம் தேதியன்று மாலையில் எல்லைப் பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த ஏழு பேரை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்களுக்கும் பட்டேல் குடும்பத்தாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து கனடிய காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த 47 வயது ஸ்டீவ் ஷெண்ட் என்பவர் மீது ஆள்கடத்தல் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. பட்டேல் குடும்பத்தாரின் உடல்கள் கண்ெடடுக்கப்பட்ட அன்று அவர் 15 பேரை ஏற்றக்கூடிய வாகனம் ஒன்றை எல்லைப் பகுதியில் ஓட்டிச் சென்றிருக்கிறார். அந்த வாகனத்தில் இரண்டு இந்தியர்கள் இருந்தனர். அதில் உணவு, தண்ணீரைக் கொண்ட பெட்டிகளும் இருந்தன.
கனடாவின் மோசமான குளிரில் பட்டேல் குடும்பத்தார் கால்நடையாகச் சென்றது குறித்து கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.

