ஓமிக்ரான் கொவிட்-19 கிருமி வகை வேகமாகப் பரவி வருவதால் சீனப் புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படும் பெரிய அளவிலான ஒன்றுகூடல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் பலர் பழகி
விட்டதையும் தங்கள் அன்புக்
குரியவர்களுடன் தொடர்புகொள்ள அவர்கள் தொழில்
நுட்பத்தைப் பயன்படுத்துவதையும் அவர் சுட்டினார்.
சீனப் புத்தாண்டின்போது பல சுப காரியங்கள் நடைபெறும் என்று திரு லீ கூறினார். திரு
மணங்களின் எண்ணிக்கை கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையை எட்டிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது குழந்தைப் பிறப்பும் சற்று சரிந்ததாகத் தமது சீனப் புத்தாண்டுச் செய்தியில்
பிரதமர் லீ நேற்று குறிப்பிட்டார்.
"எதிர்வரும் புலி ஆண்டில் திருமணங்களும் குழந்தைப் பிறப்பும் மீண்டும் அதிகரிக்கும் என நான் நம்புகிறேன்," என்று திரு லீ தெரிவித்தார்.
2020ஆம் ஆண்டில்
குறைந்தது ஒரு சிங்கப்பூரரைக் கொண்ட திருமணங்கள் அடிப்
படையில் 19,430 திருமணங்கள் பதிவானதாக அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 2019ஆம் ஆண்டில் பதிவான 22,165 திருமணங்களைவிட இது குறைவு. ஆனால் கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 12,980 தம்பதியர் இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர்.
2020ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் திருமணம் செய்து கொண்ட 8,862 தம்பதியரைவிட இது அதிகம்.
சிங்கப்பூரின் குழந்தைப் பிறப்பு விகிதம் சற்று குறைந்திருப்ப
தாகப் பிரதமர் லீ கூறினார். ஆனால் பயந்த அளவுக்கு குழந்தைப் பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சி அடையவில்லை என்று அவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 38,651 குழந்தைகள் பிறந்தன. அவற்றில் வெளிநாட்டவருக்குப் பிறந்த குழந்தைகளும் அடங்கும். 2020ஆம் ஆண்டில் 38,590 குழந்தைகளும் 2019ஆம் ஆண்டில் 39,279 குழந்தைகளும் பிறந்தன.
"கொவிட்-19 நெருக்கடிநிலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் குடும்பத்தின் புது வரவுக்காகப் பெற்றோரும் தாத்தா, பாட்டிமார்களும் வழிமேல் விழிவைத்து காத்துக்கொண்டிருப்பர். புதிதாகப் பிறக்கும் குழந்தை குடும்பத்தை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே கொண்டு செல்லும். எதிர்காலம் ஒளிமயமானதாக இருக்கும் என்ற நம்பிக்கையை அந்த இளம்பிஞ்சு அனைவருக்கும் ஏற்படுத்தும்," என்றார் பிரதமர் லீ.
திருமண பந்தத்தில் இணைந்து, குழந்தைகளைப் பெற்றெடுத்து தங்களுக்கென ஓர் அழகிய குடும்பத்தை உருவாக்கிக்கொள்ள விழையும் சிங்கப்பூரர்களுக்கு
அரசாங்கம் ஆதரவு வழங்கும் என திரு லீ கூறினார்.
குழந்தை ஆதரவு மானியத்தை அவர் உதாரணம் காட்டினார். இத்திட்டத்தின்கீழ் குழந்தை பிறக்கும் நாள் அல்லது உத்தேசப் பிறப்பு நாள் 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட கால
கட்டத்தில் இருந்தால் பெற்றோருக்கு $3,000 வழங்கப்படும்.
"சீனப் புத்தாண்டைச் சிலர் தங்கள் குடும்பத்தினருடன் கொண்டாடுவர். சிலர் குடும்பத்தினர் போல மிக நெருக்கமாக இருக்கும் நண்பர்கள், அண்டைவீட்டாருடன் இணைந்து கொண்டாடுவர். குடும்பத்தினரிடமும் அன்புக்குரியவர்களிடமும் பாசத்துடன் நடந்துகொள்ளவதே சீனப் புத்தாண்டின் சிறப்பு அம்சமாகும்.
"நமது வாழ்வில் நிகழும் மகிழ்ச்சியான தருணங்களை நமது அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். அதேபோல சிரமமிக்க காலகட்டங்களில் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் அவர்களை நாம் நாடுகிறோம்," என்றார்
பிரதமர் லீ.

