வீடுகளில் புதுப்பிப்பு வேலைகளை மேற்கொள்ளும் ஒப்பந்தக்காரர்களுக்கு எதிரான புகார்கள் சென்ற ஆண்டில் சுமார் பாதி அளவுக்கு அதிகரித்தன.
அந்தப் புகார்களில் கிட்டத்தட்ட பாதிப் புகார்கள் வேலைகளைக் குறித்த நேரத்தில் முடித்து கொடுக்கவில்லை என்றும் வேலை சரியில்லை என்றும் தெரிவித்தன.
இந்தத் தொழில்துறையைப் பொறுத்தவரை, சென்ற ஆண்டில் 1,300 புகார்கள் தாக்கலானதாக சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் (கேஸ்) தெரிவித்தது.
இந்த எண்ணிக்கை 2020ல் 869 ஆக இருந்தது. கொவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட எல்லை கட்டுப்பாடுகளின் விளைவாக கச்சாப்பொருள்கள் சரிவர கிடைக்கவில்லை. ஊழியர்கள் பற்றாக்குறையும் நீடித்தது.
அதேவேளையில், சென்ற ஆண்டில் வீட்டு சொத்துச் சந்தையில் நிலவிய புதுப்பிப்பு வேலைகளுக்கான தேவையும் இதற்குக் காரணம் என்று கேஸ் அமைப்பு தெரிவித்தது.
இந்த அமைப்பு நேற்று தனது வருடாந்திர பயனீட்டாளர் புகார் புள்ளிவிவரங்களை அறிவித்தது.
பயணம், மருத்துவம், மருத்துவப் பயனீட்டுத் தொழில்துறைகளைப் பொறுத்தவரை புகார்களின் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்து இருக்கிறது.
பயணத் துறை தொடர்பான புகார்கள் சென்ற ஆண்டில் 673 ஆகக் குறைந்தன. இந்த எண்ணிக்கை 2020ல் 1,800 ஆக இருந்தது. கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக ரத்தாகிவிட்ட அல்லது ஒத்திவைக்கப்பட்ட பயணங்களுக்கான தொகையைத் திரும்பப் பெறுவதன் தொடர்பில் அதிக புகார்கள் தாக்கலாயின.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதை விமான, பேருந்து முன்பதிவு தொடர்பில் 18 புகார்கள் வந்தன.
மருத்துவ, மருத்துவப் பயனீட்டுத் துறையைப் பொறுத்தவரை புகார்கள் ஏறத்தாழ 63% குறைந்தன. கேஸ் அமைப்புக்கு 2021ல் வந்த மொத்தப் புகார்கள் 15,515. இந்த எண்ணிக்கை 2020ல் 18,335 ஆக இருந்தது.
தன்னிடம் தாக்கலான புகார்களில் 2,069 அல்லது 13 விழுக்காட்டுப் புகார்களுக்கு இந்தச் சங்கம் உதவியது.
அவற்றில் 1,412 புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டது. பயனீட்டாளர்களுக்கு ரொக்கம் உட்பட $2 மில்லியன் திரும்பக் கிடைத்தது.
இதர 13,446 புகார்களைப் பொறுத்தவரை தனது நேரடி உதவி தேவைப்படவில்லை என்றும் கேஸ் அமைப்பு தெரிவித்தது.
ஒப்பனைத் தொழில்துறையில் தாக்கலான புகார்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டில் அதிகமாக இருந்தது. 10ல் ஒரு புகார் இந்தத் துறையைச் சேர்ந்ததாக இருந்தது.
சென்ற ஆண்டில் இணையக் கொள்முதல்கள் தொடர்பில் வந்த புகார்கள் 2,206. இது மொத்த புகார்களில் ஏறத்தாழ 14 விழுக்காடு என்பது கேஸ் அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வேளையில், புகார்களின் தன்மை கொவிட்-19க்கு முன்பு இருந்த நிலைக்குத் திரும்பிவிட்டதாக கேஸ் அமைப்பின் தலைவர் மெல்வின் யோங் தெரிவித்தார்.
இதை வைத்துப் பார்க்கையில் பயனீட்டாளர்கள் பொருள்களை வாங்கும் போக்கும் அவர்களின் பழக்கவழக்கங்களும் கொரோனாவுக்கு முந்திய நிலையில் நிலைப்பட்டு இருக்கிறது என்பதற்கான தொடக்க அறிகுறிகள் தென்படுகின்றன என்றார் அவர்.

