சிங்கப்பூரின் முன்னணி டாக்சி நிறுவனமான கம்ஃபர்ட்டெல்குரோ மார்ச் 1ஆம் தேதி முதல் டாக்சி கட்டணங்களை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளில் முதல்முறையாக அந்நிறுவனம் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இரு வாரங்களுக்கு முன்னர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் வெளியான தகவலை உறுதிசெய்த அந்நிறுவனம், பயணத் தொடக்கக் கட்டணம் 20 காசு உயரும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி, ஹியுண்டே i40 டாக்சியின் தொடக்கக் கட்டணம் $3.70லிருந்து $3.90க்கு உயர்கிறது. அதேபோல லிமோகேப், மேக்ஸிகேப் ஆகியவற்றின் தொடக்கக் கட்டணம் $3.90லிருந்து $4.10ஆக அதிகரிக்கும். தூர இடைவெளி மற்றும் நேர அடிப்படையிலான கட்டணங்களும் உயர் கின்றன.
அதன் காரணமாக ஒவ்வொரு 400 மீட்டர் தூரத்திற்குமான இடைவெளிக் கட்டணம் 22 காசிலிருந்து 24 காசாக உயரும். இது சாதாரண வகை டாக்சிகளுக்கான கட்டண உயர்வு. சொகுசு டாக்சிகளுக்கான தூர இடைவெளிக் கட்டணம் 3 காசு உயரும். 30 காசுகளாக இருக்கும் அக்கட்டணம் மார்ச் 1 முதல் 33 காசுகளாக அதிகரிக்கும்.
அதேபோல, சாதாரண வகை டாக்சிகளுக்கான காத்திருப்பு நேரத்தில் ஒவ்வொரு 45 வினாடிக்கும் தற்போது 22 காசுகள் வசூலிக்கப்படுகிறது. அது இனி 24 காசுகளாக உயரும். சொகுசு டாக்சிகளுக்கான காத்திருப்புக் கட்டணம் 30 காசிலிருந்து 33 காசுகளாக உயரும்.
புதிய கட்டணங்களின் அடிப்
படையில் பார்த்தால், 10 கிலோமீட்டர் தூரத்திற்கான உச்சநேரமற்ற கட்டணத்தில் 7.7 விழுக்காடு அல்லது 84 காசுகள் உயர்வு இருக்கும். அதாவது தற்போதைய $10.98 என்பது $11.82ஆக உயரம்.
இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு இதற்கு முன்னர் 2011ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதைப்போல உள்ளது.
பணவீக்கம், எரிபொருள் விலை ஆகியவற்றின் உயர்வு காரணமாக அதிகரித்துள்ள நடைமுறைச் செலவை ஈடுகட்டுவதில் டாக்சி ஓட்டுநர்களுக்கு உதவ பயணக் கட்டணங்கள் உயர்த்தப்படுவதாக கம்ஃபர்ட்டெல்குரோ கூறியது.
"கொள்ளைநோயிலிருந்து உலகப் பொருளியல் மீண்டுவரும் நிலையில் எண்ணெய் விலைகள் உயர்வு கண்டு வருகின்றன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் எரிபொருள் விலை சராசரியாக 10 விழுக்காடு அதிகரித்து விட்டன. இன்னொரு பக்கம் பணவீக்கமும் உயர்கிறது. குறிப்பாக, கடந்த பத்தாண்டுகளில் பணவீக்க உயர்வு 12 விழுக்காட்டை நெருங்கிவிட்டது," என அந்நிறு வனம் நேற்று தெரிவித்தது.
கொள்ளைநோய் காரணமாக கடந்த ஈராண்டுகளாக டாக்சி ஓட்டுநர்களின் வருமானம் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் களுக்கு உதவும்பொருட்டு அரசாங்கம் நிவாரணத் தொகை வழங்கியது. கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவனம் தனது டாக்சி ஓட்டுநர்களுக்கு $206.5 மில்லியன் பெறுமான வாடகைக் கழிவுகளை அறிவித்தது.
"கிட்டத்தட்ட பத்தாண்டு
களுக்குப் பின்னர் கட்டணங்கள் உயர்த்தப்படுவதால், நிலைமையைப் புரிந்துகொண்டு பயணிகள் எங்களை ஆதரிக்க வேண்டும்," என கம்ஃபர்ட்டெல்குரோ நிறுவன டாக்சி பிரிவின் தலைமை நிர்வாகி ஜேக்சன் சியா கூறியுள்ளார்.
கம்ஃபர்ட்டெல்குரோ கட்டண உயர்வை அறிவிக்கும்போது இதர நான்கு டாக்சி நிறுவனங்களும் அதனைப் பின்பற்றி கட்டண உயர்வை அறிவிக்கும். இம்முறை யும் அதேபோல நிகழக்கூடும் என்று தெரிகிறது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு மார்ச் 1 முதல் புதிய கட்டணம்: கம்ஃபர்ட்டெல்குரோ முடிவு

