ஜிஎஸ்டி உயர்வு மூலம் சில குடும்பங்கள் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாகச் செலவிடும் தொகையைக் காட்டிலும் பத்து மடங்கு அதிகமாக இருக்கும் அளவுக்கு உதவித் தொகுப்பு வகுக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
வரி உயர்வு காரணமாக விலை களும் வாழ்க்கைச் செலவினமும் உயரக்கூடும் என்ற கவலை எழுந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி உயர்வின் தாக்கத்தைச் சமாளிக்க குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பத்தினருக்கும் ஓய்வுபெற்றவர்களுக்கும் விரிவான நடவடிக்கைகள் இடம்பெறும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் விலைகள் உயர்ந்துவரும் அதேநேரம் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1.6 விழுக்காடாக இருந்த பணவீக்கம் டிசம்பர் மாதம் 2.1 விழுக்காட்டுக்கு உயர்ந்தது. மளிகைச் சாமான்களும் பயனீட்டுக் கட்டணங்களும் ஏற்றம் கண்டுவரும் நிலையில் 7 விழுக்காட்டிலிருந்து 9 விழுக்காட்டுக்கு ஜிஎஸ்டியை உயர்த்தும்போது இவை மேலும் உயரக்கூடும் என்று சிலர் தங்களது கவலைகளை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களின் கவலையைப் போக்கும் விதமாக திரு வோங் விளக்கம் தந்துள்ளார்.
"$6 பில்லியன் உதவி உத்தரவாதத் தொகுப்பு ஜிஎஸ்டி உயர்வை எவ்வாறு சமாளிக்கும் என்பதற்கு உதாரணமாக மாதம் $5,000 ஈட்டும், இரு பிள்ளை
களைக் கொண்ட தம்பதியினர் உதவித்தொகுப்பின்கீழ் கிட்டத்தட்ட $6,500 மதிப்பிலான அனுகூலன்களைப் பெறுவர். இது அவர்கள் ஜிஎஸ்டி உயர்வால் ஒவ்வோர் ஆண்டும் கூடுதலாகச் செலவிடும் தொகையைக் காட்டிலும் ஏறக்குறைய 10 மடங்கிற்குச் சமம்," என்றார் நிதி அமைச்சர்.
இந்தத் தற்காலிக உதவி நடவடிக்கைகளுடன் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டத்தை அரசாங்கம் நிரந்தரமாக மேம்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். குறைந்த வருமான சிங்கப்பூரர்களுக்கு உதவும் பொருட்டு 2012ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஜிஎஸ்டி பற்றுச்சீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இம்மாதம் 18ஆம் தேதி வரவு செலவுத் திட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது உதவிகள் தொடர்பான கூடுதல் விவரங்
களைத் தாம் பகிர்ந்துகொள்ள இருப்பதாக திரு வோங் தெரிவித்துள்ளார்.
"சிங்கப்பூர் தற்போது முக்கியமான திருப்புமுனையில் உள்ளது. கொள்ளைநோய் இன்றுவரை நம்மிடையே உள்ளது. அதேநேரம், வருங்கால சிங்கப்பூரை வளமாக்க கடினமாகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
"மூத்த குடிமக்களை சிறந்தமுறையில் பராமரிக்கவும் உயர்ந்து வரும் சுகாதாரப் பராமரிப்புச் செலவினங்களைச் சமாளிக்கவும் கூடுதல் வருவாய் தேவைப்படுகிறது. அதற்கு ஜிஎஸ்டி உயர்வு கைகொடுக்கும்," என்றார் அவர்.
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புக்கான செலவு 2018ஆம் ஆண்டு $20.7 பில்லியனாக இருந்தது. இது, வரும் 2030ஆம் ஆண்டில் $59.1 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் (25%) 65 வயதைக் கடந்த மூத்த குடிமக்களாக இருப்பார்கள். தற்போது அந்த விகி தம் 17.6 விழுக்காடாக உள்ளது.
ஜிஎஸ்டி உயர்வு குறித்து 2018ஆம் ஆண்டு முதன்முதலாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டுக்குள் இந்த உயர்வு அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்திருந்தது.
பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில், கொள்ளைநோய் தாக்கத்திலிருந்து சிங்கப்பூரின் பொருளியலை மீட்டு, நாட்டை முன்னோக்கி வழிநடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
வோங்: கூடுதல் செலவைப்போல 10 மடங்கு உதவி இருக்கும்

