தென்மாநிலமான ஜோகூரின் சட்டமன்றத் தேர்தல் மார்ச் 12ஆம் தேதி நடைபெறும் என்று மலேசியாவின் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. வேட்பாளர் நியமன நாள் 26ஆம் தேதி என்றும் அது தெரிவித்துள்ளது. அதன்படி, தேர்தல் பிரசாரம் இரு வாரங்களுக்கு நடைபெறும்.
ஆணையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜோகூர் மாநிலத்தில் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்று உள்ளனர். மாநில சட்டமன்றம் ஜனவரி 22ஆம் தேதி கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அம்னோவும் அதன் தேசிய முன்னணிக் கூட்டணிக் கட்சிகளும் ஜோகூர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தன. பெர்சத்து கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசிய கூட்டணியும் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்து வந்தது.
56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் ஆளும் கூட்டணிக்கு 29 இடங்கள் இருந்து வந்த நிலையில் கெம்பாஸ் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஒஸ்மான் சாபியான் கடந்த டிசம்பர் மாதம் காலமானதைத் தொடர்ந்து அந்த எண்ணிக்கை 28ஆனது. எதிர்த்
தரப்பு பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியைக் காட்டிலும் ஓர் இடம் மட்டும் ஆளும் தரப்புக்கு அதிகமாக இருந்து வந்த நிலையில் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
நடக்கவிருக்கும் தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி மற்றும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி ஆகியன தனித்
தனியாகக் களம் காணும் என்றும் மும்முனைப் போட்டி இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசியாவில் 18 வயதுடையவர்கள் முதல்முறையாக வாக்களிக்கவிருக்கும் தேர்தலாக இது அமையவிருக்கிறது. மலாக்கா, சரவாக் மாநிலத் தேர்தல்களை அடுத்து கடந்த ஐந்து மாதங்களில் மலேசியாவில் நடைபெறவிருக்கும் மூன்றாவது மாநிலத் தேர்தல் இது.

