கவனக்குறைவாக செயல்பட்டு, தம் நோயாளியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக மருத்துவர் ஒருவருக்கு $1,500 அபராதம் விதிக்கப்பட்டது.
'சோரியாசிஸ்' எனும் தோல் அழற்சிப் பிரச்சினைக்காக மருத்துவர் ஹரிதாஸ் ராம்தாஸ், 77 (படம்), தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் வழங்கிய குறிப்பிட்ட மருந்து சவரிமுத்து அருள் சேவியர் என்ற இந்திய ஊழியரிடத்தில் கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்திவிட்டதாகக் கூறப்பட்டது.
கட்டுமான ஊழியராகப் பணியாற்றிய இந்திய நாட்டவரான திரு சேவியர், சிகிச்சைக்குப்பின் பூஞ்சைத் தொற்று ஏற்பட்டதை அடுத்து 2014 டிசம்பர் மாதம் உயிரிழந்துவிட்டார்.
கவனக்குறைவாகச் செயல்பட்டு, திரு சேவியர் உயிரிழக்கக் காரணமாகிவிட்டதாகத் தனியார் மருத்துவரான ஹரிதாஸ்மீது முதலில் குற்றஞ்சாட்டப்பட்டது. பின்னர் அக்குற்றச்சாட்டு குறைக்கப்பட்டது.
தமது உடல், முகம், கைகால்களில் தடிப்பு ஏற்பட்டதை அடுத்து, 2014 அக்டோபர்-நவம்பர் மாதங்களில் திரு சேவியர் மூன்று வெவ்வேறு தனியார் மருத்துவர்களை நாடியதாகக் கூறப்பட்டது. மூன்று மருந்தகங்களும் அவர் சோரியாசிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தன. அதற்காக அவருக்குக் களிம்பு உள்ளிட்ட மருந்துகளையும் வழங்கின.
அப்படியும் அந்நோய் குணம் அடையாததால் அதே ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி லிட்டில் இந்தியாவில் உள்ள 'தேக்கா கிளினிக்'கிற்கு திரு சேவியர் சென்றார்.
திரு சேவியர் சோரியாசிசால் பாதிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்த டாக்டர் ஹரிதாஸ், அவருக்கு ஊசி போட்டு, சில மாத்திரைகளையும் தந்தார்.
அவற்றில் ஒன்றான 'எம்டிஎக்ஸ்', புற்றுநோய்ச் சிகிச்சையிலும் கடும் சோரியாசிசைக் குணப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. அதனால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறுநீரகப் பிரச்சினை இருப்போருக்குத் தீவிர எச்சரிக்கையுடன் அம்மருந்து கொடுக்கப்பட வேண்டும்.
ஆனால், திரு சேவியரை முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்த டாக்டர் ஹரிதாஸ் ஏற்பாடு செய்யவில்லை என்றும் அதனால் அவருக்கு ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினை இருந்ததைக் கண்டறியத் தவறிவிட்டார் என்றும் கூறப்பட்டது.

