உலகில் 70 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போடப்பட்டால் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலின் மோசமான கட்டம் இவ்வாண்டு முடிவுக்கு வரலாம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரொஸ் அதனோம் கேபிரியசுஸ் கூறியுள்ளார்.
"கொள்ளைநோய்ப் பரவலின் மோசமான கட்டம் இவ்வாண்டு ஓயும் என்று எதிர்பார்க்கிறோம், அதற்கு இவ்வாண்டு ஜூன், ஜூலை மாதங்களுக்குள் 70 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கவேண்டும்," என்று திரு டெட்ரோஸ் தென்னாப்பிரிக்காவில் செய்தியாளர்களிடம் சொன்னார்.
"இவ்வாறு செய்தால் கொள்ளைநோய்ப் பரவலின் மோசமான கட்டம் ஒரு முடிவுக்கு வரும், இதுவே எங்கள் எதிர்பார்ப்பு. இது நமது கையில் இருக்கிறது. இது நிகழ்வான சாத்தியம் மட்டும் இல்லை. இதைச் செய்து காட்டமுடியும்," என்று அவர் குறிப்பிட்டார்.
முதன்முறையாக ஆப்பிரிக்க கண்டத்தில் 'எம்ஆர்என்ஏ' ரக தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. 'மொடர்னா' நிறுவனத்தின் செயல்முறைகளைக் கொண்டு இந்தத் தடுப்பூசிகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைத் தயாரிக்கும் 'ஆஃப்ரிஜன் பயோலஜிக்ஸ் அண்ட் வேக்சீன்ஸ்' நிறுவனத்திற்குச் சென்றபோது திரு டெட்ரோஸ் பேசினார்.
"பயன்படுத்தப்படும் சூழலுக்கு இந்தத் தடுப்பூசி உகந்ததாக அமைவதுடன் இதைப் பாதுகாப்பாக வைப்பதில் சிக்கல்கள் அதிகம் இல்லாததுடன் இதன் விலையும் குறைவு," என்று திரு டெட்ரோஸ் சுட்டினார்.
இந்தத் தடுப்பூசியை வரும் நவம்பர் மாதத்திற்குள் மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்தலாம். இதைப் பயன்படுத்த 2024ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக செயல்படுத்தப்படும் இந்தத் தடுப்பூசித் திட்டத்தை 'ஆஃப்ரிஜன்' நிறுவனம் ஏற்று நடத்துகிறது. உலகச் சுகாதார நிறுவனமும் கொவேக்ஸ் திட்டமும் இதற்கு ஆதரவு வழங்குகின்றன.
ஆப்பிரிக்காவில் 11 விழுக்காட்டினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உலகில் இங்குதான் ஆகக் குறைவானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
உலகின் 70 விழுக்காடு மக்களுக்குத் தடுப்பூசி போடும் இலக்கை அடைய ஆப்பிரிக்காவில் தற்போது இருப்பதைக் காட்டிலும் தடுப்பூசி போடும் வேகம் ஆறு மடங்காகவேண்டும் என்று உலகச் சுகாதா நிறுவனத்தின் ஆப்பிரிக்க கண்டத்திற்கான பிரிவு சென்ற வாரம் கூறியது.

